வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்.. திருச்சியில் சுற்றி வளைத்த போலீஸ்
திருச்சி : திருச்சி அருகே கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ள நோட்டுகளையும், அச்சடிப்பதற்குப் பயன்படுத்தியப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள ஒரு பெட்டி கடைக்கு பொருட்களை வாங்க 5 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. பொருட்களை வாங்கியதும் அவர்களில் ஒருவர் 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துள்ளார். இதனை வாங்கிய கடைக்காரர் அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார். இதுகுறித்து பணம் கொடுத்த நபரிடம் கடைக்காரர் கேட்டபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெட்டிக் கடைக்காரர், உடனடியாக காவல்துறைக்கு ரகசியமாக தகவல் அளித்தார்.

பெட்டிக்கடைக்காரர் அளித்த தகவலின்பேரில் சம்பவ பகுதிக்கு வந்த போலீசார், 5 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். பின்னர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை செய்ய வேண்டிய முறையில் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கள்ள நோட்டு அடிக்கும் கும்பல் என தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வால்மால்பாளையம் மேலூரில் வசித்து வரும் தர்மராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ள நோட்டை அச்சடித்து வந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின் உரிமையாளரும் இதற்கு உடந்தையாக இருந்ததும் அம்பலமானது.
இதனையடுத்து, திருச்சி பழைய மதுரை சாலை வீரப்ப நாயக்கர் தெருவை சேர்ந்த அருண்குமார், புதுக்கோட்டை மாவட்டம் நக்கீரர் வயல் பகுதியை சேர்ந்த மதன் குமார், தர்மராஜ், ஸ்ரீரங்கம் அருண்குமார் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த குணா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், அவர்களிடமிருந்து கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளையும், கள்ள நோட்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த காகிதங்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணச்சநல்லூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல், போலிசில் வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,












Click it and Unblock the Notifications