திருச்சி இபி ஆபீசர்.. கிருஷ்ணகிரி சர்வேயர்.. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து சிக்கிய அரசு அதிகாரிகள்
திருச்சி: திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் திருச்சி கே.கே.நகரில் தனது பெயரில் பேட்மிண்டன் மைதானம் கட்டுவதற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருக்கிறார். இவருக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வாங்க முயன்றதாக மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மின்வாரிய அதிகாரிகள், விஏஓ, தாசில்தார், சர்வேயர், சார் பதிவாளர், நகராட்சி அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் என யார் லஞ்சம் கேட்டாலும் புகார் அளிக்கலாம். அவர்கள் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிப்பார்கள். அப்படி வெறும் 24 மணி நேரத்தில் திருச்சி மற்றும் கிருஷ்ணகிரியில் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்

திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த 52 வயதாகும் சீனிவாசன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவர் திருச்சி கே.கே.நகரில் தனது பெயரில் பேட்மிண்டன் மைதானம் கட்டுவதற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்.. கே.கே.நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (58) என்பவரை அணுகியுள்ளார். அவர் மின் இணைப்பு கொடுக்க வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி சீனிவாசன் லஞ்சப்பணம் ரூ.10 ஆயிரத்தை சந்திரசேகர் மற்றும் அவரது தனி உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (34) ஆகியோரிடம் கொடுத்தபோது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
கிருஷ்ணகிரி சர்வேயர் பட்டா மாறுதலும்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லுவை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் தன் அத்தைக்கு பாகமாக கிடைத்த, 4 சென்ட் நிலத்தை பட்டா மாறுதல் உட்பிரிவு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். நீண்ட நாட்கள் ஆகியும் பட்டா மாறுதல் உட்பிரிவு செய்யப்படாமல் இருந்ததாம். இந்நிலையில் பணியை விரைந்து முடிக்க, கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த, வேப்பனஹள்ளி சர்வேயர் ஜெயகாந்த் (29 வயது), சுரேசிடம், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின்ர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயுடன் நேற்று மாலை சுரேஷ், வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகம் அருகே சென்று கொடுத்துள்ளார்
அங்கு நின்ற சர்வேயர் ஜெயகாந்த் பணத்தை வாங்கி தன் உதவியாளர் திலீப்குமார் என்பவரிடம் கொடுத்திருக்கிறாராம். அப்போது அங்கே மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நாகராஜன், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications