திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவர் 6 பேர் கொண்ட நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது மர்ம கும்பலினர் இவரை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகளை பிடிக்கவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பு. இவருக்கு தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உண்டு. இதனால் வழக்கம்போல் இன்று காலையிலும் திருவாணை பகுதியில் உள்ள ஜிம்மிற்கு உடற்பயிற்சிக்காக சென்றார். உடற்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது அன்புவை 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சுத்து போட்டனர். மேலூர் பகுதியில் அவரை வழிமறித்த கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அன்புவை தாக்க தொடங்கினர். எனினும் அவர்களிடம் சிக்காமல் ஓடினார். பின் தொடர்ந்து வந்த அந்த கும்பலினர் சுமார் 500 மீட்டர் தூரம் விரட்டி சென்று அன்புவை வெட்டினர்.
ஸ்ரீரங்கம் கோவில் தெப்பக்குளம் பார்க்கிங் பகுதியில் வைத்து நாலாபுறமும் சுற்றி வளைத்த அந்த கும்பலினர் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அன்பு அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்பு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும், இந்த கொலை சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக் கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்து, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியில் பிரபல ரவுடியான திலீப் என்பவருக்கு நெருக்கமானவராக அன்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அன்பு மீதும் பல வழக்குகள் உள்ளன. எதற்காக இந்த கொலை நடந்தது?, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜிம்முக்கு சென்று விட்டு வந்தவரை 6 பேர் கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications