திருச்சி எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் 4 பேர் கைதானது எப்படி?.. சிக்கிய முக்கிய ஆதாரம்.. பரபரப்பு தகவல்கள்
திருச்சி: திருச்சி நவல்பட்டு சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.
திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
சிசிடிவி காட்சிகள்
வாகனம் பயணித்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வந்தனர். அதில் ஒரு இடத்தில் திருடர்கள் மின்னல் வேகத்தில் செல்வதும், அவர்களை பிடிக்க பூமிநாதனும் அதை விட மின்னல் வேகத்தில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
6 பேரது செல்போன்கள்
இந்த நிலையில் இரு சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை நடத்தப்பட்ட 6 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த போலீஸார் அவர்களில் யாருடைய செல்போன் சிக்னல் கடைசியாக பூமிநாதன் ரோந்து செய்த இடத்திற்கும் அவர் கொல்லப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் இடத்திற்கும் இடையே இருந்தது என்பதை ஆய்வு செய்தனர்.
செல்போன்கள்
அதன்படி 4 பேரது செல்போன்கள் மேற்கூறிய இடத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதை வைத்துதான் கொலையாளிகளை போலீஸார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையில் கொலை நடந்த நேரத்தில் செல்போன் பயன்பாடுகளும் முக்கிய அங்கமாக திகழ்ந்தது.
24 மணி நேரம்
பூமிநாதன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த 4 பேரில் 10 வயது சிறுவனும் இருந்தது போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் 4 பேரும் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆட்டு திருட்டை பல ஆண்டுகளாக செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.