இதென்ன கலர் கலராக கையில்! மந்திரித்து கட்டிய கயிறுகளை கழற்றிக் கொடுத்த ராஜேந்திர பாலாஜி!
திருச்சி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் இருந்து கையில் கட்டியிருந்த கலர் கலரான கயிறுகள் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.
மேலும், திருச்சி சிறையில் சக கைதிகளுக்கு என்ன உணவு கொடுக்கப்படுகிறதோ அதே உணவு தான் ராஜேந்திரபாலாஜிக்கும் கொடுக்கப்படுகிறதாம்.
திருச்சி சிறையில் உயர் பாதுகாப்பு கொண்ட பகுதியான அறை எண் 4-ல் ராஜேந்திரபாலாஜி அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்
ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீஸாரால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு இப்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதிகளுக்கான சிறைவிதிகளின் படி ராஜேந்திரபாலாஜியிடம் இருந்து அவர் கையில் கட்டியிருந்த கலர் கலரான மந்திர கயிறுகளை கழற்றியுள்ளது போலீஸ். தனது கையில் இருந்து கயிறுகளை கழற்ற முதலில் தயக்கம் காட்டிய ராஜேந்திரபாலாஜி, பிறகு போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி கயிறுகளை அவிழ்த்திருக்கிறார்.

சிறைவிதிகள்
ராஜேந்திரபாலாஜியை பொறுத்தவரை ஜோதிடம், மாந்திரிகம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். ஜோதிடரின் அறிவுறைப்படி சில மாதங்களுக்கு முன்பாக மஞ்சள் சட்டை அணிந்து வலம் வந்தார். அதேபோல் அவ்வப்போது சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டுவார். இந்தச் சூழலில் தனது பலமாக நினைத்து கட்டியிருந்த கயிறுகள் அனைத்தையும் சிறை விதிப்படி அவிழ்த்துக் கொடுத்துவிட்டு, மனம் நொந்து தவிக்கிறாராம் ராஜேந்திரபாலாஜி.

சக கைதிகள்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு கொடுக்கப்படுகிறதாம். அதே உணவு தான் ராஜேந்திரபாலாஜிக்கும் கொடுப்படுகிறதாம். இதனிடையே இவர் விசாரணை கைதி என்பதால், அவருக்கு ஆடை கட்டுபாடுகள் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. ரத்தம் அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு ராஜேந்திரபாலாஜி ஏற்கனவே எடுத்துவரும் மாத்திரைகளை சாப்பிட சிறைத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

சிலைகடத்தல் மன்னன்
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் அடைக்கப்பட்டிருந்த அறையில் தற்போது ராஜேந்திரபாலாஜி அடைக்கப்பட்டிருக்கிறார். இவரது அறை எண் 4 என்ற பகுதி உயரடுக்கு பாதுகாப்பு கொண்டது. இதனிடையே விருதுநகரில் இருந்து வந்துள்ள ஒரு குழு திருச்சியில் முகாமிட்டு, ராஜேந்திரபாலாஜியை சந்திக்க வழக்கறிஞர்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications