நான் எப்படி தனியா இருப்பேன்.. மனைவி இறந்த துக்கம் தாளாமல் உயிரிழந்த கணவர்.. திருச்சியில் உருக்கம்
திருச்சி: திருச்சி அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தவர் பரமசிவம்.
70 வயதாகும் பரமசிவம் தனது மனைவி சரஸ்வதியுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் மகன் சதாசிவம் என்பவர் பராமரிப்பில் இருந்துள்ளனர்.

உடல்நிலை
பரமசிவத்திற்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கணவரை அருகில் இருந்து சரஸ்வதி கவனித்துக் கொண்டார். இவருடன் இருந்த சரஸ்வதி மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் மாறி மாறி சென்றுவிட்டு வந்தார்.

பரமசிவம்
பரமசிவத்திற்கு சற்று உடல் நலம் தேறி இருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு இடையில் நேற்று மனைவி சரஸ்வதி தொட்டியம் பால சமுத்திரத்தில் உள்ள வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மாரடைப்பு
மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்குள் சரஸ்வதி உயிர் பிரிந்தது. இந்த தகவலை அறிந்தவுடன் உறவினர்கள் பரமசிவத்தை பாலசமுத்திரத்திற்கு அழைத்து வந்தனர். துக்க நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் மனைவி இறந்தது குறித்து பரமசிவத்திடம் விசாரித்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் யாரிடமும் பேசாமல் தனியாக உட்கார்ந்து இருந்தவ பரமசிவம் சரஸ்வதி உடலை பார்த்தபடியே இருந்திருக்கிறார்.

சோகம்
சரஸ்வதியின் இறுதி ஊர்வலத்திற்கு சடங்குகள் துவங்கியது. அப்போது மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட பரமசிவம் திடீரென வாசலில் சுருண்டு விழுந்து மயங்கினார். அருகே இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை பார்த்தபோது அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்திருந்தது. மனைவி இறந்த சோகத்தில் அங்கேயே பரமசிவமும் இறந்துவிட்டார்.

அதிர்ச்சி
இந்த சம்பவம் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது . மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மரணத்திலும் ஒன்றாக பிரியாமல் இவர்கள் சேர்ந்தே இருந்தது மக்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரையும் ஒரே நேரத்தில் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அருகருகே இறுதி சடங்கை செய்தனர்.












Click it and Unblock the Notifications