ஆன்லைன் ரம்மியில் ரூ28 லட்சம் இழந்த கணவர்.. தட்டி கேட்டதால் ஆத்திரம்.. பிளாஸ்டிக் பையில் மனைவி சடலம்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே வீட்டை விற்று கிடைத்த ரூ 28 லட்சம் பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதை கண்டித்த மனைவியை கொலை செய்து அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு மறைத்து வைத்திருந்த கணவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தாளக்குடி சாய் நகரைச் சேர்ந்தவர் நரசிம்மராஜ். இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 5 நாட்களாக தங்கள் மகள் சிவரஞ்சனி செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் மகளை பார்க்க அவர்கள் இருவரும் மகளின் வீட்டிற்கு வந்தனர். வீடு பூட்டப்பட்டிரு்நத நிலையில் மாப்பிள்ளை நரசிம்மராஜை தொடர்பு கொண்டனர்.

செல்போன்
அப்போது அவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நரசிம்மராஜுவின் சகோதரியை தொடர்பு கொண்டனர். கடந்த திங்கள்கிழமை நரசிம்மராஜுக்கும் சிவரஞ்சனிக்கும் வீடு விற்றதில் கிடைத்த ரூ 28 லட்சத்தை எதில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.

அடிதடி
இதில் ஏற்பட்ட அடிதடியில்தான் சிவரஞ்சனியை காணவில்லை என சந்தேகம் இருப்பதாக மாப்பிள்ளை மீது பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தாளக்குடி சாய் நகரில் உள்ள சிவரஞ்சனியின் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து போய் பார்த்தனர்.

சிவரஞ்சனி
அப்போது வீடு முழுவதும் சிவரஞ்சனியை தேடினர். பின்னர் அங்கிருந்த வாஷிங் மெஷின் அருகில் ஒரு பிளாஸ்டிக் பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பையில் சிவரஞ்சனியின் அழுகிய சடலம் இருந்தது. இதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை
இதையடுத்து போலீஸார் விசாரணையில் ஆன்லைன் ரம்மியால் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பதையே நரசிம்மராஜ் முழு நேரமாக கொண்டிருந்தார். பணத்தாசையில் ஆன்லைனில் ரம்மி விளையாடினார். இதனால் நிறைய பணத்தை இழந்த அவர் புதிய வீட்டை ரூ 28 லட்சத்திற்கு விற்றுள்ளார்.

லாட்டரி
அந்த பணத்தையும் லாட்டரியில் முதலீடு செய்வதாக சிவரஞ்சனியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிவரஞ்சனி, ஏற்கெனவே அழித்தது போதாதா பணத்தில் நிலம் வாங்குமாறு கூறியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்டு மனைவியை நரசிம்மராஜு அடித்து உதைத்துள்ளார். அப்போது சிவரஞ்சனியின் பெற்றோர் சமரசம் செய்து வைத்தனர்.

ரூ 28 லட்சம்
இதையடுத்து ரம்மி விளையாடி ரூ 28 லட்சத்தையும் இழந்துள்ளார். இழந்த பணத்தை மீட்க இரவு முழுவதும் தூக்கத்தை கெடுத்து ரம்மி விளையாடிய நரசிம்மராஜை சிவரஞ்சனி தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நரசிம்மராஜு சிவரஞ்சனியை அடித்து உதைத்து சமையல் அறையில் இருந்த கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

பிளாஸ்டிக் மூட்டை
பின்னர் சடலத்தை மறைக்க பிளாஸ்டிக் மூட்டையாக கட்டி வைத்துள்ளார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது தாய் மற்றும் இரு குழந்தைகளிடமும் சிவரஞ்சனிக்கு கொரோனா வந்துவிட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தற்போது வீட்டில் இருந்தால் நமக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்றும் கூறி ஆந்திராவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து நரசிம்மராஜை பிடிக்க ஆந்திராவுக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications