திருச்சியில் அதிகாலை நேரம்.. சில நொடிகள் கண் அயர்ந்ததால், இறந்த இடுக்கி தம்பதி.. உருக்கமான தகவல்
திருச்சி: அதிகாலை நேரம்.. சில நொடிகள் கண் அயர்ந்து வாகனம் ஓட்டியதால் திருச்சியில் கொள்ளிடம் பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி ஆற்றில் கவிழ்ந்து இடுக்கி தம்பதி உயிரிழந்தனர். இவர்களை பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்த சசிதரன் என்பவருடைய மகன் ஸ்ரீநாத் (வயது 36) ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஆராதி (25). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் சென்னை வந்து அங்கிருந்து கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தாயாரை பார்க்க மனைவியுடன் சென்றார்.

அங்கு தாயாரை பார்த்துவிட்டு மீண்டும் ராஜஸ்தான் செல்வதற்காக காரில் மனைவி ஆராதியுடன் சென்னை புறப்பட்டு வந்துள்ளார் ஸ்ரீநாத். ஸ்ரீநாத் கேரளாவில் இருந்து காரில் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தார்கள். ஸ்ரீநாத் தன் மனைவியுடன் கோட்டயத்தில் இருந்து தேனி, திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணி அளவில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கொள்ளிடம் பாலத்தில் வேகமாக கார் சென்று கொண்டு இருந்தது.
காரை ஸ்ரீநாத் ஓட்டி செல்ல அவருடன் முன் இருக்கையில் ஆராதி அமர்ந்து இருந்தார். திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இடதுபுறமுள்ள நடைபாதையில் ஏறி தடுப்புக்கட்டையில் மோதி உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மணல் மட்டுமே இருந்த காரணத்தால், கார் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஸ்ரீநாத்தும், அவரது மனைவி ஆராதியும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றுக்குள் இறங்கி நொறுங்கி கிடந்த காருக்குள் பிணமாக கிடந்த தம்பதியை மீட்டு வெளியே தூக்கி வந்தார்கள்.
பின்னர் தம்பதி உடல்களை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். ஸ்ரீநாத்திடம் இருந்த வாகன ஓட்டுனர் உரிமத்தை வைத்து அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் அறிந்தனர். போலீசார் கேரளாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உறவினர்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனை வந்தனர். அங்கு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீநாத் மற்றும் ஆராதியின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.
இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த போது, அதிகாலை நேரம் என்பதால் கண் அயர்ந்ததால் ஸ்ரீநாத்தின் கட்டுப்பாட்டை மீறி கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடும் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதிகாலை நேரங்களில் கார்களில் செல்வோர் தூக்கம் வருவதுபோல் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்க வேண்டும்.
அப்படி உறங்காமல் பயணித்தால் விபரீதம் ஏற்படும் என்பதை இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி உணர்த்துகின்றன. அதேபோல் எப்போதாவது ஒருமுறை காரில் நீண்ட தூரம் பயணிப்போர் கண்டிப்பாக இரவில் செல்ப் டிரைவ் வேண்டாம். தொழில்முறை ஓட்டுநர்கள் கவனமாக செல்வார்கள் என்பதால், தொழில்முறை ஓட்டுநர்களை தேர்வு செய்து பயன்படுத்துவதே நல்லது. செல்ப் டிரைவ் என்பது பகலில் செல்வதே சிறப்பானதாக இருக்கும் என்கிறார்கள் பலர்.












Click it and Unblock the Notifications