இந்தியாவை காப்பாற்ற INDIA கூட்டணி.. மோடியால் பொறுக்க முடியலை.. 2024ல் வெல்வோம்.. முதல்வர் சூளுரை
திருச்சி: பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக INDIA கூட்டணி அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் INDIA கூட்டணி நிச்சயம் வெல்லும் என்றும் திருச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் திமுக முழு வீச்சில் களமிறங்கி உள்ளது. திருச்சியில் நடைபெற்று வரும் பயிற்சி பாசறையில் 15 மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திருச்சிக்கும் திமுகவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு எனவும் திருச்சி திமுகவின் தீரர்களின் கோட்டை என முதல்வர் ஸ்டாலின் கூறினார். வாக்குச்சாவடியில் எப்படி களமாட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார். ஊழல்வாதியான எடப்பாடி பழனிச்சாமியை அருகில் வைத்துக்கொண்டே ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார் பிரதமர் மோடி என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், மணிப்பூர் பற்றி எரிகிறது அதைப்பற்றி எதுவும் பேசவில்லை என்றார்.

பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றவே INDIA கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார். நாங்கள் வாரிசு அரசியல்தான் நடத்துகிறோம். ஆரியர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றும் திராவிடர்களின் வாரிசு நாங்கள். கோட்சேவின் வாரிசு என்று பாஜக ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.
சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு பதிலடி தரும் வகையில் அனைவரும் கணக்கு தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியா கூட்டணியைப் பார்த்து மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று சொன்ன ஸ்டாலின், 2024ஆம் ஆண்டில்
இந்தியா நிச்சயம் வெல்லும். நாற்பதும் நமதே என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications