அக்.25 முதல் திருச்சி -அபுதாபி இண்டிகோ விமான சேவைகள் ரத்து! அதிருப்தியில் பயணிகள்!
திருச்சி: திருச்சி - அபுதாபி இடையே விமான சேவைகள் அக்டோபர் 25 முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது. முன்னதாக வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் இந்த விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
இண்டிகோ விமான நிறுவனம் திருச்சியில் உள்நாட்டு விமான சேவையை மட்டுமே இயக்கி வந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 11 முதல் திருச்சி - அபுதாபி இடையே விமானச் சேவைகளையும் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்த இந்த விமான சேவை சில நிர்வாக காரணங்களால், அக்டோபர் 25-ஆம் தேதி முதல் திருச்சி -அபுதாபி 4 விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 3 விமானச் சேவைகளை அளிக்கும் நிலையில், இண்டிகோ நிறுவனம் திடீரென தற்போது அனைத்து சேவைகளையும் ரத்து செய்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாய், சார்ஜா பயணக் கட்டணங்களை ஒப்பிடும்போது, அபுதாபி செல்வதற்கான கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அபுதாபி செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் துபாய் அல்லது சார்ஜாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக அபுதாபி செல்வது அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக, அபுதாபி விமான சேவைகள் ரத்து நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் எடுத்திருக்கலாம். துபாய் அல்லது சாா்ஜா சேவைகளை தொடரவும் முடிவு செய்திருக்கலாம் என தொழில்நிபுணா்கள் சிலா் தெரிவிக்கின்றனா்.
இதற்கு முன்னர், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து அபுதாபி செல்லும் பயணிகள் கோவை, திருவனந்தபுரம் அல்லது சென்னை வந்துதான் பயணித்திருந்தனர். இதனையடுத்துதான் திருச்சியிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டது. இப்போது திருச்சி மட்டுமல்லாது கோவையிலிருந்து அபுதாபிக்கான நேரடி விமான சேவையும் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அனுமதி தற்போது வரை கிடைக்கவில்லை என்று கடந்த செப்டம்பரில் செய்தி வெளியானது. அக்டோபர் இறுதி வரை கோவையிலிருந்து அபுதாபிக்கு வழக்கம்போல விமானங்கள் இயக்கப்படும். ஆனால், அதன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இது திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications