மாற்றுத்திறனாளி பத்மாவதியின் தன்னம்பிக்கை! இட்லி மாவு தயாரிக்க இயந்திரம் வாங்கி தந்த இனிகோ இருதயராஜ்
திருச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணான பத்மாவதி, தாம் சுய தொழில் தொடங்க உதவி செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, இட்லி மாவு தயாரிக்க சொந்த நிதியிலிருந்து இயந்திரம் வாங்கிக் கொடுத்திருக்கிறார் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்.
இனிகோ இருதயராஜ் திருச்சியில் இருக்கிறார் என்றால், மாலை 6 மணி முதல் இரவு 10 வரை அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் யார் சென்றாலும் பார்க்க முடியும். அந்த வகையில் அவரிடம் உதவி கோரி வந்த மாற்றுத்திறனாளி பெண் பத்மாவதி குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல் வருமாறு;

''எனது தொகுதியான பாலக்கரையில் 2 கால்களும் சூம்பிய நிலையில் இருந்த மரியம் மஹால் பகுதியை சேர்ந்த பத்மாவதி என்ற சகோதரி தான் சுயமாக தொழில் செய்ய என்னிடம் உதவி கோரினார். கால்கள் போனால் என்ன, உழைத்து முன்னேற கைகள் இருக்கிறதே என்ற அவருடைய தன்னம்பிக்கை என்னை மலைக்க வைத்தது.
உடனடியாக அவர் இட்லி மாவு கடை நடத்த தேவையான அரவை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை என் சொந்த செலவில் வாங்கி கொடுத்தேன்.

இந்த நிலையில் மறுபடியும் என்னை தேடிவந்த பத்மாவதி தற்போது வியாபாரம் நல்ல படியாக நடப்பதாக நன்றியோடு தெரிவித்ததோடு, குடியிருக்க ஒரு 3,000 ரூபாயில் வாடகைக்கு வீடு கிடைக்க உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உடனே மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு, குடிசை மாற்று வாரியத்தில் பத்மாவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டேன். கழக அரசின் மூலம் பத்மாவதி அம்மையார் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளார் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.''












Click it and Unblock the Notifications