"ஏ.. என்னங்க புறக்கணிக்கிறோம்.. புறக்கணிக்கிறோம்னு எப்ப பார்த்தாலும்.." டென்ஷன் ஆன அமைச்சர் நேரு!
திருச்சி : திருச்சியை திமுக அரசு புறக்கணிக்கிறதா என பிரஸ் மீட்டில் செய்தியாளர் கேட்டதால் கோபமடைந்தார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சிக்கு திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை லிஸ்ட் போட்டு பதில் அளித்தார்.
திருச்சி புறக்கணிக்கப்படவில்லை, மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார் முதல்வர் எனத் தெரிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்ட லிஃப்ட், திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், தானியங்கி நோய் எதிர்ப்பு குருதி பகுப்பாய்வு இயந்திரம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

திருச்சியில் நேரு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "தமிழ்நாட்டில் வார்டு மறுவரையறை , மாநகராட்சி விரிவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்பு அந்தக் குழு அமைக்கப்படும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அந்த குழு அமைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையறை செய்யப்படும். மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக, திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

எடப்பாடி ஆசை நிறைவேறாது
தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாக இருக்கிறது. அவர் நாளை தேர்தல் வரவேண்டும் என்று கூட விரும்புவார். ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சட்டமன்ற தேர்தல் எந்த தேதியில் வர வேண்டுமோ அந்த தேதியில் தான் நடக்கும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்தில் தேர்தல் வருமா என்கிற கேள்விக்கே இடமில்லை எனத் தெரிவித்தார்.

முதல்வர் சொல்லுவார்
மேலும் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திமுகவில் புதிதாக 1 கோடி பேரை உறுப்பினர்களாக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். அது சாத்தியம் தான் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்துக் கேட்டதற்கு, அதிமுக கூட்டணி குறித்தோ அரசியல் தொடர்பான கேள்விகள் குறித்தோ நான் பதிலளிக்க மாட்டேன். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான் பதில் அளிப்பார் எனத் தெரிவித்தார்.

என்ன புறக்கணிக்கிறோம்?
திமுக ஆட்சியில் திருச்சி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுகிறதே என செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் கே.என்.நேரு, "20 மாத கால திமுக ஆட்சியில் ரூ.3000 கோடி அளவிற்கு திட்டங்கள் திருச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் பல கோடி மதிப்பிலான திட்டங்களை திமுக அரசு செய்து வரும் நிலையில் திருச்சி புறக்கணிக்கப்படுவதாக கூறுகிறீர்கள். திருச்சி ஒருபோதும் புறக்கணிக்கப்படாது. திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நிதியை முதல்வர் வழங்குகிறார்.

பொறாமைப்படும் அளவுக்கு
என்ன கேட்டாலும் செய்யும் நிலையில் இருக்கிறார் முதல்வர். ஆனால், எப்போது பார்த்தாலும் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்கிறீர்கள்.. எனக்குப் புரியவில்லை.. திருச்சியில் புதிய காவிரிப் பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அவர்களுடன் பேசி அது அகற்றப்பட்டு பின்பு புதிய காவிரி பாலப் பணிகள் தொடங்கும். திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார் முதல்வர்" எனத் தெரிவித்தார் அமைச்சர் கே.என்.நேரு.












Click it and Unblock the Notifications