துபாயில் உயிரிழந்த இளைஞர்.. உடலை சொந்த ஊர் எடுத்துவர உதவிய ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவ சங்கம்
திருச்சி: துபாயில் மரணமடைந்த திருச்சி இளைஞரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நல்லுங்கள் அமைப்பின் மூலம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
துபாய் நகரில் உள்ள அல் கூஸ் பகுதியில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சிறுவயலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி மரணமடைந்தார்.
விசிட் விசாவில் வேலை தேடிச் சென்ற அவர், இறந்த செய்தி துபாய் போலீசார் மூலம் இந்தியத் துணை தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழப்பு
இந்தியத் துணை அதிகாரி ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்தை தொடர்பு கொண்டு, அவரது குடும்பத்தினர் முகவரியை வழங்கி, அவர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சிறுவயலூர் கிராமத்தின் அருகேயுள்ள கே.கே.நல்லூர் தபால் நிலையத்தை தொடர்பு கொண்டு, அவர்களின் மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு உள்ளனர்.

கோரிக்கை
வெளிநாட்டில் உயிரிழந்த தர்மராஜ் உடலைச் சொந்த ஊருக்கு எடுத்த வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலம் இந்தியத் துணை தூதரகத்துக்குக் கோரிக்கை விடுத்தனர். அதேபோல வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகமும் இது குறித்து இந்தியத் துணை தூதரகத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. தர்மராஜ் மரணம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

திருச்சி விமான நிலையம்
போலீசார் விசாரணை நிறைவடைந்ததையடுத்து சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் மூலம் கடந்த செப். 25ஆம் தேதி இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது. உயிரிழந்த தர்மராஜ் குடும்பத்தினரின் நிலைமையைக் கருத்தில் கொண்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் 'நல்லுங்கள்' அமைப்பின் மூலம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தர்மராஜ் உடல் அவரது சொந்த கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த பணியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பேராசிரியர்கள் சையது முஹம்மது, சமூகப்பணித் துறை பேராசிரியர் முனைவர் ஷேக் ஃபரீத், அந்த துறையின் இரண்டாம் ஆண்டு முதுநிலை படிப்பு மாணவர்கள் முஹம்மது பாஷில், ஷபிகுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

நன்றி
தர்மராஜின் உடலைச் சொந்த ஊருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் எடுத்துச் செல்ல இந்தியத் துணை தூதரகமும் துபாய் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்டோர் ஆதரவு வழங்கினர். தர்மராஜின் உடலைத் தாயகத்துக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை எடுத்த இந்தியத் துணை தூதரகம், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பின் 'நல்லுங்கள்' அமைப்புக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications