திருச்சியில் 3-ம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் கமல்.. 30-ம் தேதி வரை சூறாவளி சுற்றுப்பயணம்..!
திருச்சி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் இன்று 3-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13-ம் தேதியன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார்.
திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்த அவர் எம்.ஜி.ஆரின் வாரிசு தாம் தான் எனக் கூறி அதிரடி கிளப்பினார்.

சட்டமன்றத் தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பிக் பாஸ் ஷூட்டிங் உள்ள நாட்கள் போக மற்ற நாட்களில் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார்.

3-ம் கட்ட பிரச்சாரம்
ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள அவர் இப்போது 3-வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் திருச்சி செல்லும் அவர், திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், டிவிஎஸ் டோல்கேட், பால்பண்ணை, திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

பரப்புரை
அதனைத் தொடர்ந்து நாளை தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் அவர் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் நாளை மறுதினம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.

பலருடன் சந்திப்பு
பிறகு கந்தர்வகோட்டை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்லும் கமல், டிசம்பர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது 3-ம் கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்த பிரச்சாரத்தின் போது தொழில் அதிபர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரையும் கமல் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications