6ம் ஆண்டு நினைவு தினம்.. திருச்சியில் கருணாநிதி சிலை திறப்பு.. காணொலியில் திறந்து வைத்த ஸ்டாலின்
திருச்சி: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சியில் அவரது முழு உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. இந்நிலையில் தான் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்சனையில் அவர் காலமானார்.

இதையடுத்து இன்று கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அமைதி பேரணி தொடங்கி நடந்து வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் இருந்து கடற்கரை நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அமைதிப்பேரணி நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக சென்னை ஓமந்தூரார் வளாக கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் திருச்சி திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். சென்னையில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இந்த சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த சிலை என்பது திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கருணாநிதியின் 100வது பிறந்தநாளையொட்டி கலைஞர் 100 என்ற தலைப்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இன்றைய தினம் 101 நிகழ்ச்சியாக இந்த சிலை திறப்பு நடந்து முடிந்தது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications