டூட்டியில் இருந்த பெண் போலீஸுக்கு சரமாரி முத்தம்... எஸ்.ஐ மீது பாய்ந்தது வழக்கு
பெண் போலீசுக்கு முத்தம் தந்த எஸ்.ஐ மீது வழக்கு பதிவு
திருச்சி: பெண் போலீசுக்கு முத்தம் தந்து பரபரப்பை ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம். 54 வயதான இவர், கடந்த 12-ம் தேதி நைட் டியூட்டியின்போது, உடன் வேலை பார்த்த 34 வயது சசிகலா என்ற பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்தார்.
இது சம்பந்தமாக சசிகலா அங்கு வந்த ஏட்டு கேசவனிடம் புகார் சொல்ல, அந்த புகார் எஸ்.பி. ஆபீசுக்கு போனது. அதுவும் இல்லாமல் இது குறித்து விசாரிக்க ஸ்டேஷனில் இருந்த வீடியோ பதிவு எஸ்.பி. ஆபீசுக்கும் அனுப்பட்டது.
சஸ்பெண்ட்
அங்கு அனுப்பியபோது, வேறு யாரோ இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு விடவும், வைரலாகி விட்டது. எனவே விஷயமும் சீரியஸாகி விட்டது. இதையடுத்து, ஸ்டேஷனில் வைத்து முத்த மழை பொழிந்த பாலசுப்பிரமணியம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஆதங்கம்
இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ, "இருவரும் சம்மதத்தோடுதான் ஜாலியாக இருந்தோம். தண்டனை கொடுத்தால் இரண்டு பேருக்கும்தான் கொடுக்கணும். எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது" என ஆதங்கப்பட்டார்.
3 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து மறு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாலசுப்பிரமணியம் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஒரு வார காலம்
பெண் போலீஸ் சசிகலா, இது சம்பந்தமாக அளித்த புகாரின் அடிப்படையிலேயே மாவட்ட காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆன நிலையில், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், இப்போதுதான் வழக்கே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.