பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ்.. லால்குடியில் திமுகவுக்கு சவாலாக மாறிய அதிமுக.. என்ன நடக்கிறது?
திருச்சி: லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவள்ளலுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறார் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ். தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்பதால், அதிமுகவினர் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ குப கிருஷ்ணனுடன் தவெக சார்பாக போட்டியிட்டு வாக்குகளை பிரிப்பதால், லால்குடி தொகுதியில் இரட்டை இலை கரை சேர வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் லீமா ரோஸ் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் லால்குடி தொகுதி இருக்கிறது. திமுக சார்பாக சிட்டிங் எம்எல்ஏ செளந்தர பாண்டியன் மீதான அதிருப்தி காரணமாக, அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுக சார்பாக பாரிவள்ளல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகவே திமுக வென்று வருகிறது. இதற்கு அதிமுக தரப்பில் முக்கிய நிர்வாகிகள் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இப்படியான சூழலில் பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்த லாட்டரி கிங் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்க்கு லால்குடி தொகுதி சீட் ஒதுக்கப்பட்டது.
சீட் ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே அத்தொகுதியின் அதிமுகவினருக்கு பரிசுப் பொருட்களை வாரி இறைத்தார் லீமா ரோஸ். இதனால் அதிமுகவில் எந்த அதிருப்தியில் இல்லாமல் லீமா ரோஸ்க்கு நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் வேட்புமனுவில் லீமா ரோஸ் தனது சொத்து மதிப்பாக ரூ.1,049 கோடியும், மார்ட்டினின் சொத்து மதிப்பாக ரூ.5,000 கோடியும் காட்டியது தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது.
இதனால் லீமா ரோஸ் வென்றால் சொந்த பணத்திலேயே அத்தனை விஷயங்களையும் செய்து கொடுத்துவிடுவார் என்று கிராமங்களில் அதிமுகவினர் பேசத் தொடங்கினர். அதற்கேற்ப லீமா ரோஸ் மகளும் அம்மாவுக்காக பிரச்சாரத்தில் கலக்கி வருகிறார். இன்னொரு பக்கம் திமுக மீதான அதிருப்தி வாக்குகளை தவெக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கைப்பற்றுகிறார்.
அதேபோல் லீமா ரோஸ்க்கு உடையார் சமூக வாக்குகள் பெருவாரியாக கிடைக்கும் என்று நம்பிக்கையோடு அதிமுகவினர் வலம் வருகின்றனர். திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சவால் அளித்தாலும், 30 ஆண்டுகளுக்கு பின் லால்குடி தொகுதியில் அதிமுக வெல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. இருப்பினும் தேர்தலுக்கு 4 நாட்கள் மட்டுமே இருப்பதால், கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications