லெட்ஜர் பாதி.. ருத்ரா மீதி.. லலிதா ஜுவல்லர்ஸ் கடையை சூறையாடிய திருடர்கள்.. பழைய டெக்னிக் வைத்து ஷாக்
Recommended Video
திருச்சி: கொஞ்சம் பழைய டெக்னிக்தான்.. ஆனாலும் இப்போது ஒர்க் அவுட் ஆகி உள்ளது! தலையில் குல்லா, முகத்தில் குழந்தைகள் அணியும் மாஸ்க்.. கைகளில் கிளவுஸ், ஜெர்கின் சகிதமாக லலிதா ஜூவல்லரிக்குள் உள்ளே நுழைந்த 2 திருடர்களின் கெட்-அப்கள் டார்க் நைட் என்ற படத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
டார்க் நைட்.. ஆங்கிலப் பட மோகிகளுக்கு மறக்க முடியாத படம்.. 2008ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம். பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியது. பேட்மேன் காமிக்ஸ் கேரக்டரை முதல் முறையாக படத்தில் பயன்படுத்தி அசத்தியிருப்பார் நோலன். நோலன் இயக்கிய பேட்மேன் பட வரிசையில் இது 2வது படம்.
முதல் படம் 2005ல் வெளியான பேட்மேன் பிகின்ஸ். ஜோக்கர் என்ற பெயரில் (ஹீத் லெட்ஜர் இந்த கேரக்டரில் நடித்திருப்பார்) நகரில் நூதன முறையில் கொள்ளையடித்து வரும் நபரைப் பிடிக்க போலீஸார் முயற்சிப்பார்கள்.ஜோக்கர் வேடத்தில் இந்த படத்தில் அவர் கொள்ளைகளில் ஈடுபடுவார் லெட்ஜர். இந்தப் படத்தில் வரும் காட்சிதான் படத்தின் ஹைலைட்டே! (வெறும் 29 வயதில் செத்துப் போனவர் இந்த மகா நடிகர் லெட்ஜர்.. மரணத்திற்குப் பின்னர் இவரைத் தேடி ஆஸ்கர் விருது வந்தது)
அதிர்ச்சியில் திருச்சி.. பெரிய ஓட்டை போட்டு.. ரூ.50 கோடி நகைகள் அபேஸ்.. லலிதா ஜுவல்லரியில் அட்டகாசம்
ஜோக்கர்
ஹீத் லெட்ஜர் மிகப் பிரமாதமாக நடித்த படம்தான் இந்த டார்க் நைட். இதில் வில்லத்தனத்தில் விளையாடியிருப்பார். இந்த ஜோக்கர் கிறுக்கனா... முரடனா என்று படம் பார்க்கும் நமக்கே ஒரு நிமிஷம் குழம்பி விடும். உண்மையை சொல்ல போனால், இந்த ஜோக்கர் இது இரண்டுமே கிடையாது. இவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு சின்ன புத்திசாலித்தனம் ஒளிந்து கொண்டு இருக்கும்.
கிறுக்குத்தனம்
அந்த அளவுக்கு மூளைக்காரர்தான் இந்த ஜோக்கர். இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை, ஜோக்கர் என்றாலே ஏதோ கிறுக்குத்தனம் செய்யும் நபர், கோமாளி போல டிரஸ் பண்ணிட்டு திரிபவர், சேஷ்டைகளை செய்து சிரிப்பை வரவழைப்பவர் என்றெல்லாம் நாமே கற்பனை செய்து கொண்டு இருந்தோம். ஆனால் இந்த படம் வந்துதான், ஜோக்கர் என்றால் வெறும் காமெடி பீஸ் மட்டும் இல்லை என்பதும், வெறும் தோற்றத்தை வைத்து ஒருவரை எந்த முடிவுக்குமே வந்துவிடக்கூடாது என்றும் உணர்த்தியது.
பாக்யராஜ்
இந்த படத்தை போலவே தமிழில் ருத்ரா என்ற பெயரில் பாக்கியராஜ் நடித்த படம் வெளியானது. அதில் சர்க்கஸ் கோமாளியாக வேடமிட்டு.. வங்கியில் இருந்த ஊழியர்களை ஒரே ரூமில் அடைத்துவிட்டு, லாக்கர்களில் இருந்த பணம், நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு.. வெளியில் நின்றிருந்த போலீஸையும் முட்டாளாக்கி.. அவர்கள் முன்னாடியே வெறும் ஆளாக வெளியே தப்பி வந்து கெத்து காட்டி இருப்பார்.
லலிதா ஜூவல்லரி
இப்படி கோமாளிகள் போல மாஸ்க் போட்டுக் கொண்டு வந்தால், யாருமே கண்டுபிடிக்க முடியாது என்ற டெக்னிக்கைதான் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்திலும் மர்மநபர்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த கெட்-அப் போட்டால் யாராலும் முகத்தை சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் கொள்ளையர்களின் டெக்னிக். மிக மிக புத்திசாலித்தனமாக கொள்ளையடித்துள்ளனர்.
விசாரணை
லெட்ஜரைப் போன்ற வேடத்தை மட்டும் போடாமல், கடையை அக்கு வேறு ஆணி வேறாகவும் அறிந்து வைத்து திருடியிருப்பது போலவே தெரிவதாக போலீஸார் கூறுகின்றனர். இவர்கள் யார்.. வட மாநிலக் கொள்ளையர்களா அல்லது கடைக்கு தெரிந்த நபர்களா.. உள்ளூர்த் திருடர்களா என்று பல கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.