வைஷ்ணவி தேவி யாத்திரை..ஐஆர்சிடிசியின் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்..என்னென்ன சிறப்பம்சங்கள்
திருச்சி: இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் சார்பில் பாரத் கவுரவ் வைஷ்ணவி தேவி யாத்திரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜூலை 1ஆம் கொச்சுவேலியில் இருந்து இயக்கப்படும் இந்த ரயில் பயணத்திற்கான டிக்கட்டுகளை ஆன்லைன் மூலம் www.irctctourism.com என்ற இனையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட இந்திய ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான இந்திய ரயில் உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பாரத் கவுரவ் சுற்றுலா சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஜூலை 1ஆம் கொச்சுவேலியில் இருந்து 11 நாட்கள் பயணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை என்ற பெயரில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் கேரளா மாநிலம் கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம், மற்றும் சென்னை எழும்பூர் வழியாக சென்று ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவதேவி (கட்ரா), அமிர்தசரஸ் செல்கிறது.
ரயில் பயண கட்டணம் தலா ஒருவருக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ.22 ஆயிரத்து 350, 3-ம் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்ய ரூ.40 ஆயிரத்து 380 ஆகும். இந்த ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேட்டரிகார், 2 பவர்கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
11 நாட்களும் 12 இரவுகளும் கொண்ட பயணத்தில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்களான, வெளியிடங்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத தங்குமிடம், உள்ளூர் பகுதிகளை பார்வையிடுவதற்கான போக்குவரத்து, உணவு, பயண காப்பீடு, சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கட்டுகளை முன்பதிவு செய்ய 8287931974 என்ற தொலைபேசி எண்ணிலும் ஆன்லைன் மூலம் www.irctctourism.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications