மட்டன் பிரியாணி.. சிக்கன் லெக்பீஸ் பிரை.. அன்பில் மகேஷ் வைத்த விருந்து! மனம் குளிர்ந்த தொண்டர்கள்!
திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறுசுவை அசைவ விருந்து வைத்து தொண்டர்களை மனம் குளிர வைத்திருக்கிறார்.
மேலும், தனக்கு தனி டைனிங் ஹால் எல்லாம் வேண்டாம் எனக் கூறிவிட்டு தொண்டனோடு தொண்டனாக பந்தியில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் சாப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருச்சி தெற்கு மாவட்டத்தில், திமுகவை வளர்த்த முன்னாள் நிர்வாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

பொது உறுப்பினர்கள்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மிக பிரம்மாண்டமாக இருந்தன. சுமார் 50,000 பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் அறுசுவை அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி, சிக்கன் லெக்பீஸ் பிரை, முட்டை மசால், பாயாசம், பிரட் அல்வா, என வகைவகையாக வாழை இலை நிரம்ப உணவு பரிமாறப்பட்டது. இதில் பிரியாணி அன்லிமிடெட் ஆக வழங்கப்பட்டதால் இன்னைக்கு ஒரு புடி என்கிற வகையில் வந்திருந்த பொது உறுப்பினர்கள் வயிராற சாப்பிட்டு மகிழ்ந்தனர். பந்தி நடைபெற்ற இடத்தை ஒரு ரவுண்ட் அடித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனக்கும் ஒரு இலையை போடுங்கப்பா எனக் கூறி தொண்டர்களோடு தொண்டராகவே அமர்ந்து சாப்பிட்டார்.

மேடைக்கு அழைத்து
இதனிடையே முன்னதாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னாள் நிர்வாகிகளின் குடும்பத்தினர் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். அதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் 70வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக் கூறும் வகையில் நீண்ட கரவொலி எழுப்பப்பட்டது. பொது உறுப்பினர்கள் கூட்டம் தானே, சாதாரணமாக இருக்கும் என நினைத்து வந்தவர்களுக்கு அங்கு காத்திருந்த பிரம்மாண்டம் வியப்பை தந்தது.

பாகுபாடில்லை
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், வெறும் பொது உறுப்பினர்களாக மட்டும் உள்ள தங்களை அழைத்து இந்தளவு பெருமைப்படுத்தி அனுப்பியதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான இமேஜ் திருச்சி தெற்கு மாவட்ட திமுக தொண்டர்கள் மத்தியில் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications