"கல்லக்குடி கொண்டான்" கருணாநிதி! ஏன் தெரியுமா? பாடம் எடுத்த அமைச்சர்! சிரித்தபடியே கேட்ட கனிமொழி
திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கல்லக்குடி கொண்டான் என்ற பெயர் வருவதற்கு என்ன காரணம் என்பதை தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு அமைச்சர் கே.என். நேரு விளக்கினார்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கோவண்டாகுறிச்சியில் ஒரு தன்னார்வ அமைப்பின் மனநலம் மற்றும் சமூகப் பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.

விழாவில் கே.என்.நேரு பேசுகையில் திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றியம் என்பது கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் திமுக வசம் இருக்கிறது. அப்போது நான் இங்கு ஒன்றியத் தலைவராக இருந்தேன். தொடர்ந்து 32 ஆண்டுகள் திமுகவிடம் இந்த ஒன்றியம் இருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்த போது மட்டும்தான் அடுத்தவர்கள் வசம் சென்றது. இந்த ஒன்றியத்தின் உள்ள கல்லக்குடியில் நடந்த போராட்டத்தின் காரணமாகதான் கல்லக்குடி கொண்டான் என்ற பெயரை கருணாநிதி பெற்றார். தமிழகத்தில் சமத்துவபுரங்கள் அமைக்க வேண்டும் என எண்ணினோம்.
அப்போது புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் தான் சமத்துவரம் அமைக்க வேண்டும் என கருணாநிதி உத்தரவிட்டார். அதற்குரிய இடத்தை அவரே வந்து ஆய்வு செய்தார். அப்போது இரண்டு மணி நேரம் அங்கேயே அமர்ந்து தனது இளமை கால போராட்டங்களை நினைவு கூர்ந்தார்.
இத்தகைய சிறப்புமிக்க புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு கருணாநிதிக்கு பிறகு தலைவர்கள் யாருமே வந்ததே இல்லை. தற்போது கனிமொழி வந்திருக்கிறார். இவர் இங்கே வந்திருப்பது இந்த பகுதி மக்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என நேரு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி பேசினார்.
அவர் பேசுகையில் அமைச்சர் நேரு புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு தலைவர்கள் யாருமே வரவில்லை என்றார். இங்கே ஒன்றை கூறிக் கொள்கிறேன். எப்போது எங்கு வந்து என்னை அழைத்தாலும் நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். இதனால் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக ஆட்சிக்கு வந்து 2ஆண்டுகள் ஆன நிலையில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் திமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications