லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம்.. 3 தொகுதிகளிலும் அடிமட்ட அளவில் இறங்கிய திமுக.. கே.என்.நேரு வார்னிங்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் லால்குடி, ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளில் திமுக அடிமட்ட அளவில் தொண்டர்களை பணியாற்ற அறிவுறுத்தி இருக்கிறது. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக சில பணியாற்றாத நிர்வாகிகளை அழைத்து வார்னிங் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் திமுக முழுமையாக கைப்பற்றியது. அதில் ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. மணப்பாறை தொகுதியில் மீண்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அப்துல் சமாத் களத்தில் இருக்கிறார்.

அதேபோல் ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டிக்கு பதிலாக துரைராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக லீமா ரோஸ் களமிறக்கப்பட்டுள்ளார். உடையார் சமூத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான இவர், திமுக வேட்பாளர் பாரிவள்ளலுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறார்.
லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்பதால், அவருக்கு பணியாற்ற அதிமுகவினர் முட்டி மோதுகின்றனர். இதனால் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் செல்லும் இடங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இந்த 3 தொகுதிகளில் அதிமுக மிகப்பெரிய சவாலை திமுகவுக்கு அளித்து வருகிறது.
இதனை உணர்ந்த திமுக தலைமை உடனடியாக மண்டல பொறுப்பாளரான கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பணியாற்றாமல் இருப்பது திமுகவுக்கு பின்னடைவாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்பின் அமைச்சர் கே.என்.நேரு கீழ்மட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து உடனடியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இன்னொரு பக்கம் பணியாற்றாமல் இருக்கும் நிர்வாகிகளுக்கும் நேரடியாக எச்சரிக்கை சென்றிருக்கிறது. இதனால் அடுத்த 3 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் செல்வாக்கு இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பலப்படுத்த நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட உள்ளனர்.
இதே பாணியை அமைச்சர் அன்பில் மகேஷ்-ம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியிலும் அறிவுறுத்தி இருக்கிறார். திருச்சியின் 9 தொகுதிகளில் ஒன்று குறைந்தால் கூட இரு அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகும். இதனால் திருச்சி மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே திமுக உயர்மட்ட நிர்வாகிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications