அமைச்சராக நான் இங்கு வரவில்லை... வியாபாரியாக வந்திருக்கிறேன்... உருகிய வெல்லமண்டி நடராஜன்..!
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம், தாம் உயிருடன் இருக்கும் வரை மார்க்கெட்டை இடமாற்றம் செய்யவிட மாட்டேன் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி காந்திமார்க்கெட் என்பது அந்த ஊரின் அடையாளமாகவும், நூற்றாண்டு பழமை மிக்க பெருமைக்குரிய ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த மார்க்கெட்டை காலி செய்து திருச்சி புறநகரான கள்ளிக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இதற்கு வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதோடு இடமாற்றம் செய்யும் முடிவை கண்டித்து போராட்டத்திலும் குதித்துள்ளனர். இந்நிலையில் அவர்களை சந்திக்க சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் வியாபாரிகள் யாரும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. இதையடுத்து நான் இங்கு அமைச்சராக வரவில்லை, வியாபாரியாக தான் வந்திருக்கிறேன் என அவர்களிடம் உருகியிருக்கிறார்.
மேலும், தாம் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் வியாபாரிகளை இடமாற்றம் செய்யவிடமாட்டேன் என்றும் எப்போதும் வியாபாரிகள் பக்கம் நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் இந்த உருகல் பேச்சு போராட்டக்களத்தில் இருந்தவர்களை வியக்க வைத்தது.

இதனிடையே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்துக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். அமைச்சராவதற்கு முன்பு வரை வெல்லமண்டி நடராஜன் காந்திமார்க்கெட்டில் உள்ள தனது கடைக்கு சென்று வந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications