Trichy: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தை திருட்டு.. பகீர் சம்பவம்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை மாயமாகியுள்ளது. தடுப்பூசி போடுவதாக கூறி குழந்தையை நர்ஸ் வேடமணிந்த பெண் வாங்கி சென்றதாக அந்த குழந்தையின் தாய் சுகன்யா கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாயமான ஆண் குழந்தையை தேடி வருகின்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சுகன்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி அரசு மருத்துவமனை
மருத்துவமனையின் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த சுகன்யாவிடன் நர்ஸ் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என கூறியிருக்கிறார். பின்னர் அவர் குழந்தையை வாங்கி சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை திரும்பி கொண்டுவரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த அவர் இது குறித்து மற்ற நர்சுகளிடம் விசாரித்த போது அவர்கள் குழந்தையை வாங்கி செல்லவில்லை என தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் மாயமான ஆண் குழந்தையை தேடி வருகின்றனர்.
விஜய் கடும் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு விஜய் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications