தமிழகத்தில் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி ரெய்டு: 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள் பறிமுதல்
திருச்சி: குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாம் உள்ளிட்ட தமிழகத்தில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனைகளில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
கேரளாவில் அண்மையில் ரூ1,500 கோடி போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் ஒருபகுதியாக இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 20 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
திருச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். இம்முகாமில் பெரும்பாலானோர் ஈழத் தமிழர்கள். இவர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருந்தனர். இவர்களது கோரிக்கையை அண்மையில் தமிழக அரசு ஏற்றது.

இன்றைய சோதனைகள் மொத்தம் 25 இடங்களில் நடைபெற்றது. இச்சோதனைகளில் 57 செல்போன்கள், 68 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 2 லேப் டாப்கள், இலங்கை பாஸ்போர்ட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications