திருச்சி ஏர்போர்ட்டில் சுற்றிவளைத்த என்.ஐ.ஏ.. சார்ஜாவில் இருந்து வந்தவரிடம் 5 மணி நேரம் விசாரணை!
திருச்சி : சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த தஞ்சாவூரை சேர்ந்த முகமது அசாப் என்பவரை தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் வைத்தே சுமார் 5 மணி நேரம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையோரின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லை சேர்ந்த கைசர் மற்றும் தேனியைச் சேர்ந்த சாதிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின் ஒருபகுதியாக திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் என்பவரிடம் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மதியம் 3 மணியளவில் விசாரணையானது நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில் அவர் எந்த தடை செய்யப்பட்ட அமைப்போடும் தொடர்பில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முகமது அசாப் கடந்த 28 ஆம் தேதி திருச்சிக்கு வருகிறேன் என அவர்கள் உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர் வராமல் இருந்துள்ளார். மேலும் குடும்பத்தினரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று திருச்சி விமான நிலையம் வந்த அசாப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முகமது அசாப் என்பவர் சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவரது கருவிழி ரேகை பொருந்தாததை அடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் இந்தியாவுக்குத் திரும்பிய அவரை, திருச்சி விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக முகமது அசாப்பிடம் விசாரணை நடத்தினர்.
முகமது அசாப் வெளிநாட்டில் இருக்கும்போது இங்கு உள்ளவர்கள் யார் யாரிடம் தொடர்பில் இருந்தார், அவருடைய சமூக வலைதள கணக்கு, வெளிநாட்டில் இருக்கும்போது அவர் இங்கு யாருக்கெனும் நன்கொடைகள் தந்தாரா என்பது குறித்தெல்லாம் அவரிடம் விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications