உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களிலும் தனித்து போட்டி... கட்சிகளை அலறவிடும் சீமான்!
திருச்சி: உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு ஈழ இறுதி யுத்தத்துக்குப் பின்னர் நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கினார். 2009 லோக்சபா தேர்தலில் அதிமுகவை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார்.
அதன் பின்னர் நாம் தமிழர் கட்சி எந்த கூட்டணியையும் ஆதரிக்காமல், எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்தே போட்டியிட்டு வந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் டெபாசிட்டை இழந்தபோதும் தமிழர் இன நலன் மட்டுமே எங்கள் குறிக்கோள் என்பதை முன்வைத்து தேர்தல் களத்தை தளராமல் சந்தித்து வருகிறது நாம் தமிழர் கட்சி.
அமித்ஷாவுடன் அதிகாரப் போட்டி வெடித்தது- ராஜ்நாத்சிங்குக்கு 6 அமைச்சரவை குழுவில் இடம்!
நாம் தமிழர் வாக்குகள்
தற்போது முடிவடைந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது. இது அரசியல் கட்சிகளை மிரள வைத்திருக்கிறது. விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சிக்கும் சில இடங்கள் வசமாகும் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.
நீட் எதற்கு?
இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது சீமான் கூறியதாவது: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களா? தற்போது நீட்தேர்வு பயிற்சி கொடுக்கிறோம் என்று தமிழகத்தில் கல்வி மறைமுக வியாபாரமாகிவிட்டது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் அந்த கல்லூரிகளில் எங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது. இங்குள்ள மருத்துவ இடங்கள் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்கள் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு மருத்துவம் பார்க்க சென்று விடுகிறார்கள். ஆகவே தமிழகத்தில் நீட்தேர்வு முறையே தேவையில்லை.
தூக்கி எறியப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முறையை உலகம் முழுவதும் தூக்கி எறிந்துவிட்டார்கள். அதிக பணம் கொடுப்பவர்கள் ஆளுங்கட்சி, கொஞ்சம் குறைவாக கொடுப்பவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலை தான் இருக்கிறது.
அதிகாரம் இழந்த அமைப்புகள்
தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, நீதிமன்றம், சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாக உள்ளன. ஆனால் மோடி பிரதமராக வந்தபிறகு, அந்த அமைப்புகள் தங்களது அதிகாரத்தை இழந்து விட்டன. எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆட்சி மாற்றத்துக்காக அரசியல் செய்யவில்லை. அடிப்படை மாற்றத்துக்கான அரசியல் செய்து வருகிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இவ்வாறு சீமான் கூறினார்.