குப்பையிலும் காசு சம்பாதிக்கலாம்! மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு! திருச்சி மேயரின் பலே திட்டம்!
திருச்சி: குப்பை கூழங்களில் இருந்தும் வீட்டில் பயன்பாடற்று கிடக்கும் பழையப் பொருட்களில் இருந்தும் பணம் சம்பாதிக்கும் அற்புத திட்டம் ஒன்றை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி வீடுகளில் உள்ள பேப்பர், பிளாஸ்டிக்குகள் உள்ளிட்ட பழைய பொருட்களை திருச்சி மாநகராட்சி நிர்வாகமே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளவுள்ளது.
ஒரு கிலோ பழையப் பொருட்களுக்கு ரூ.12 என விலை நிர்ணயம் செய்துள்ள திருச்சி மாநகராட்சி, இந்தத் திட்டத்தின் சோதனை முயற்சியை மேயர் அன்பழகனின் சொந்த வார்டான 27-வது வார்டில் தொடங்கியுள்ளது.
'பிட்டு' கிடைச்சா போதுமே! என்னம்மா இப்படி பண்றீங்களே! அடுக்கடுக்காய் அள்ளி விடும் திருச்சி சாதனா..!
பேரிச்சம்பழம்
பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டோம்.
அந்தளவுக்கு அந்தக் காட்சி அனைவரது மனதிலும் பதிந்திருக்கிறது. காரணம் நம் அனைவரது வீட்டிலும் ஏதோ ஒரு வகையில் பயன்படாத பழைய பொருட்கள் நிறைய இருப்பதும் அதனை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரியிடம் மொத்தமாக
கொடுப்பதற்காக சேர்த்து வைப்பதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடிய ஒன்று தான்.
திருச்சிவாசிகள்
இந்தச் சூழலில் திருச்சிவாசிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருப்பதோடு புதுமையான திட்டம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. தி மணி பின் என்ற நிறுவனத்தோடு இணைந்துள்ள திருச்சி
மாநகராட்சி நிர்வாகம் குப்பையையும் பணமாக்குவோம், மண்ணை வளமாக்குவோம் என்ற முழக்கத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி வீடுகளில் பயன்பாடற்று கிடக்கும் பழைய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புத்தகங்கள், பேப்பர்கள் மற்றும் அனைத்து விதமான அட்டை பெட்டிகளை இனி மாநகராட்சியே காசு கொடுத்து வாங்கிக் கொள்ளவுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை
இதுமட்டுமல்லாமல் பழைய பிரிட்ஜ், மிக்ஸி, டிவி, மின் விசிறி, கம்ப்யூட்டர், மொபைல், எவர் சில்வர் பாத்திரங்கள், இரும்பு, அலுமினியம் பாத்திரங்கள், என சகலவிதமான பழைய பொருட்களையும் திருச்சிவாசிகள் இனி காசாக மாற்றலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வீடு தேடி வந்து மாநகராட்சி ஊழியர்கள் பழையப் பொருட்களை எடை போட்டு பெற்றுக்கொண்டு அதற்கேற்ப தொகையை கொடுத்துவிட்டுச் செல்லவுள்ளார்கள்.
மேயர் வார்டு
ஒரு கிலோ பழைய பொருட்களுக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ரூ.12 என விலை
நிர்ணயம் செய்துள்ளது. இது பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகள் கொடுக்கும்
தொகையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் சோதனை
முயற்சி மாநகராட்சி மேயர் அன்பழகனின் சொந்த வார்டான 27-வது வார்டில் தொடங்கப்பட்டுள்ளது.