ஒருதலைக்காதல்.. மாணவியின் கழுத்திலேயே.. துடிதுடிக்க கொன்ற 17 வயது சிறுவன்.. திருச்சியில் ஷாக்
திருச்சி: திருச்சியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவியை, ஒரு தலையாய் காதலித்த 17 வயது சிறுவன், கழுத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்கள் அழகுபாண்டி- முத்தாலம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 2-வது மகள் ஜோகிதா (வயது 18) திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருச்சி தென்னூர் பாரதிநகரில் உள்ள தனது அத்தை மகாலெட்சுமி வீட்டில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார் ஜோகிதா
ஜோகிதாவின் அத்தை மகாலட்சுமி அருகில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். மகலாட்சுமி தினமும் வேலைக்கு சென்று வருவதால், கல்லூரி முடிந்த பின் வீட்டில் தனியாகத்தான் ஜோகிதா இருந்து வந்துள்ளார். அதேநேரம் ஜோகிதாவின் அக்கா பவித்ரா தனது கணவருடன் திருச்சியில் தான் வசித்து வருகிறார்.

சம்பவம் நடந்த சனிக்கிழமை அன்று மகாலெட்சுமி காலையிலேயே மளிகை கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் ஜோகிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று மாலை தந்தை அழகுபாண்டி, தனது மகள் ஜோகிதாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
அப்போது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அழகுபாண்டி தனது மற்றொரு மகள் பவித்ராவுக்கு போன் செய்து, அவரை அத்தை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
இதையடுத்து பவித்ரா அங்கு சென்று பார்த்தபோது, ஜோகிதா கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுத பவித்ரா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து ஜோகிதாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
உடல் கொண்டுவரப்பட்டது: இது பற்றி தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் ஜோகிதாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு அவரது உடலை திருச்சிக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். பின்னர் ஜோகிதாவின் உடல் திருச்சி வந்ததும், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து இருக்கலாம் என்று கருதி, இதுகுறித்து விசாரணை செய்தனர்.

ஒருதலைக்காதல்: விசாரணையில், ஜோகிதாவின் உறவினரான அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இதற்கிடையே ஜோகிதாவுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்துள்ளனர். இது பற்றி அறிந்த அந்த சிறுவன் நேற்று முன்தினம் மாலை ஜோகிதா வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறான்.
என்ன நடந்தது? : இதில் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியதோடு கூர்மையான ஊசி போன்ற ஆயுதத்தால் அவரது கழுத்தில் குத்தி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவனை திருச்சி போலீசார் அடைத்தனர். ஒரு தலைக்காதலால் 18 வயது மாணவியை 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications