அதிமுக கொடியை விடுங்க! திருச்சி மாநாட்டு மேடையின் வடிவம் தெரியுமா? எடப்பாடியை டென்ஷனாக்கும் ஓபிஎஸ்
திருச்சி: ஓபிஎஸ் அணி சார்பில் இன்று நடத்தப்படும் மாநாட்டையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் போல் மேடை அமைக்கப்பட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சினையில் இரட்டை தலைமைகளாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் தற்போது இரு வேறு துருவங்களாக உள்ளனர். அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருந்தது. அது போல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் ஆகியவற்றை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தேர்தல் ஆணையம்: இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அதன்படி அவரை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கர்நாடகா தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தையும் அவருக்கு வழங்கியது.
ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு: இந்த நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் மாநாடு நடத்துவதாக அறிவித்தார். அதன்படி இன்றைய தினம் மாலை திருச்சியில் ஜிகார்னர் மைதானத்தில் மாநாடு நடக்கிறது. ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட போதிலிருந்தே அவரும் அவர் தரப்பினரும் அதிமுக பெயரையும் அதிமுக கொடியையும் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அதிமுக கொடி: ஆனால் இந்த திருச்சி மாநாட்டில் கருப்பு சிவப்பு வெள்ளை கொடியில் இரட்டை இலை சின்னத்தை பொறித்து ஆங்காங்கே கொடிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பினரோ அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையமோ நீதிமன்றங்களோ சொல்லவில்லை. அதனால் நாங்கள் பயன்படுத்தியே தீருவோம் என தெரிவிக்கிறார்கள்.
முப்பெரும் விழா: இந்த திருச்சி மாநாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்தநாள், கட்சியின் 51 ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக திருச்சி ஜிகார்னர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாடு ஓபிஎஸ்ஸுக்கு திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வடிவில் மாநாட்டு மேடை அமைத்துள்ளனர்.
மேடை வடிவம்: அதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு நடுவே ஓபிஎஸ் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்டபடி நடவடிக்கை என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறி வரும் நிலையில் விழா மேடையே அதிமுக அலுவலகம் போல் அமைத்துள்ளதை கண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கோபத்தில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications