'புதுமை பெண் திட்டம்' கார்டை கையில் கூட வாங்கவில்லை! செல்போனுக்கு மெசேஜ்.. திருச்சி மாணவிகள் ஹாப்பி!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், புதுமை பெண் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 613 கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்தார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்றும் பெயர் சூட்டப்பட்டது.

புதுமைப் பெண் திட்டம்
இந்நிலையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற புதுமைப் பெண் என்ற திட்டத்தை, சென்னையில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வரவு வைக்கப்படும். மேலும் இத்திட்டத்திற்காக மாநில அளவில் ரூ.698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் தொடக்கம்
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் தகுதியுடைய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவிகள் 6,500 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், இனிக்கோ இருதயராஜ், அப்துல்சமது, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

613 கல்லூரி மாணவிகள்
இதில் முதற்கட்டமாக, 613 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 பெறுவதற்கு வங்கி Debit Card வழங்கப்பட்டது. இதில், கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 477 பேருக்கும்,, பொறியியல் கல்லூரி மாணவிகள் 83 பேருக்கும், சட்டக் கல்லூரி மாணவிகள் 10 பேருக்கும், மருத்துவக் கல்லூரி மாணவிகள் 23 பேருக்கும், தொழிற்கல்வி மாணவிகள் 20 பேருக்கும் இன்று வங்கி Debit Card வழங்கப்பட்டது.

"புதுமைப் பெண்" கையேடு
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களையும் சில முன்னுதாரணங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் "புதுமைப் பெண்" என்ற கையேடு வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் தமிழகம் முழுவதும் சுமார் 6,00,000 அரசு பள்ளிகளில் படித்த இளங்கலை, பட்டயம் மற்றும் தொழிற் பயிற்சி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications