ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் விடுதலை ... திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஜாமீனில் விடுதலையானார்.
திருச்சி : உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்ததை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலையானார்.
முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்யவிருந்த நிலையில் தலைமறைவானார். தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக 6தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்றது.

திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
இதனையடுத்து கடந்த 6ஆம் தேதியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திரபாலாஜியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அறிவித்தை தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி மனு
ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவரது வழக்கறிஞர் இல்லத்தில் தமிழக காவல்துறை நடத்திய சோதனை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்
ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மோசடி புகார் தொடர்பாக இதுவரை ராஜேந்திர பாலாஜிக்கு தமிழக காவல்துறை சம்மன் வழங்கவில்லை என்றும் முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் முன்னரே அவரை கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என வாதிட்டார். இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிபந்தனைகள் விதிப்பு
காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததை அடுத்து ராஜேந்திர பாலாஜி இன்று காலை 7 மணி அளவில் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது வழக்கறிஞர் முத்துப்பாண்டி மற்றும் உறவினர்கள் ஆகியோர் காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications