மின் கட்டணம் உயர்வு.. காரணம் அதிமுக போட்ட கையெழுத்து.. உதய் திட்டம் பற்றி ஸ்டாலின் சீற்றம்
திருச்சி: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்த நிலையில், இந்த மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்ன? என்று முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. இது மின் நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில், நேற்று விளக்கம் அளித்த தமிழக அரசு, வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும், இலவச மின்சாரம் தொடரும் என்றும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் வரும் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாகவும் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மின் கட்டணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், "மின் கட்டண உயர்வுக்கு அதிமுக ஆட்சியில் கையெழுத்தான உதய் திட்டமே காரணம். அதிமுக ஆட்சியின் போது மின் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "வீட்டு இணைப்புக்கு எந்த விதமான கட்டண உயர்வும் கிடையாது. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் இணைப்புகள், குடிசைகளுக்கு இலவச இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் என்பதும் தொடரும். கைத்தறி, விசைத்தறி அளிக்கப்பட்டு சலுகைகளும் அப்படியே தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒன்றிய அரசின் விதிப்படி 4.7 விழுக்காடு கட்டணம் அதிகரிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், 2.18 விழுக்காடாக அதை குறைத்து அந்த தொகையையும் மானியமாக ஏற்றுக்கொண்டு மின் வாரியத்திற்கு கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வீட்டு இணைப்புகளுக்கு எந்த வித கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும் என்று சொல்லியிருக்கிறோம்.
பிற மாநிலங்களில் இதை விட அதிகம். அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின் வாரியத்தை கடனில் மூழ்கடித்து விட்டு சென்றார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டது அதிமுக அரசு. தற்போதைய பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம். இதுதான் உண்மை" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், அமுல் நிறுவனம் தமிழகத்திற்குள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆவினில் சிறுவர்கள் வேலைக்கு ஈடுபடுத்தப்பட்டதாக வெளியான செய்தி தவறானது. அந்த துறையின் அமைச்சர் மறுத்து விட்டார். திட்டமிட்டு பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. ஆதாரம் என்று பொய்யாக பரப்புகிறார்களே தவிர அதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications