சரியில்லாத சாலை.. கால்வாயில் பாய்ந்த பள்ளி பேருந்து.. திருச்சி அருகே பரபரப்பு
Recommended Video
திருச்சி: திருச்சி அருகே கல்லணை பகுதியில், தனியார் பள்ளிக் கூட பேருந்து சாலையோர கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
ரோடு சரியில்லை. மழைத் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது. பஸ்சில் குழந்தைகள் இருந்துள்ளனர். இருவருக்கு மட்டும் லேசான காயம் மற்றபடி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு விட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கல்லணையில் செல்லம்மாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளிப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது முக்குடிப்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது, நேற்று பெய்த கன மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலையும் கூட சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் மோசமான நிலையில்தான் உள்ளது.
இந்த நிலையில் பள்ளிப் பேருந்து வேகமாக வந்ததா என்று தெரியவில்லை, சாலையோரமாக இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விட்டது. நல்ல வேளையாக பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். இருவருக்கு மட்டும் லேசான காயம் என்று கூறப்படுகிறது.
இந்த சாலை மோசமாக உள்ளதாக மக்கள் நீண்ட காலமாகவே புகார் கூறி வருகின்றனர். சரி செய்யக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை விமோச்சனமே இல்லை. மழையும் வேறு பிடித்துக் கொண்டுள்ளதால் சாலையில் நடக்கக் கூட பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. வாகனங்களும் சரி, குறிப்பாக பள்ளி வாகனங்கள் விதிகளை மதிக்காமல் வேகமாக செல்வதும் தொடர் கதையாகவே உள்ளது.
இன்று நடந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எதுவும் நேரிடவில்லை. ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காதே.. எனவே சாலையை சரி செய்வதோடு, அனைத்து வாகனங்களும் விதிகளை மதித்து வண்டிகளை ஓட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தி: திவ்யா
புகைப்படம், வீடியோ உதவி: மாரியப்பன், ஆட்டோ டிரைவர், குமரேசபுரம்