தமிழ் தேசியம் பேசும் சீமான், மணியரசன்.. இவர்களெல்லாம் பாஜக ஆதரவாளர்கள்.. சுப.வீரபாண்டியன் ஒரே போடு
திருச்சி: திராவிடத்தை எதிர்க்கும் நோக்கத்திற்காகவே சீமான், மணியரசன் போன்றோர் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திராவிட நட்புக் கழகத்தின் அறிமுகக் கூட்டம் சேதுரெத்தினபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசினார்கள். நல்ல கருத்தோடு இருப்பவர்கள் கருத்தாக செயல்படுவார்கள். ஆனால் வெறும் செருப்போடு இருப்பவர்கள் செருப்பாகத்தான் இருப்பார்கள். தமிழ்நாட்டை மட்டுமல்ல இனி அதிமுகவையும் திமுக தான் காப்பாற்ற வேண்டும்.

அதிமுக பற்றி விமர்சனம்
பாஜகவினர் சூத்திரம் வைத்துள்ளார்கள். இரண்டு கட்சிகள் மாநிலத்தில் வலிமையாக இருந்தால் இரண்டாவதாக இருக்கும் கட்சியை அழித்து அந்த இரண்டாம் இடத்தை பிடி என்பதுதான் அந்த சூத்திரம். அதுதான் பாஜகவின் நோக்கம். அவர்கள் தற்போது அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.

சுப.வீரபாண்டியன் பேச்சு
இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் அவர்களாக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சண்டைபோட்டுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இடையே சண்டை போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை அழித்து விட்டு தாங்கள் வந்து விடலாம் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். திமுகவின் மீது கைவைக்க முடியாது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

பாஜக மீது விமர்சனம்
ஆனால் தமிழகத்தில் பாஜகவால் இரண்டாவது இடத்தை மட்டுமல்ல, ஏழாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாது. தாமரைக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள்.

தமிழ் தேசியம்
அதற்கு துணையாக சில மோசமான அமைப்புகளை அவர்கள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். மணியரசன், சீமான் பாஜகவின் ஆதரவாளர்கள். அவர்கள் முழுக்க முழுக்க திராவிடத்தை எதிர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளனர் என்று கடுமையாக விமர்சித்தார். இந்தக் கூட்டத்தில் திமுக, மனித நேயக்கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிட நட்புக் கழகத்தினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டனர். சீமான், மணியரசன் போன்றோர் திராவிட கருத்தியலுக்கு எதிராக தமிழ் தேசியம் பேசுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications