திருச்சி கனரா வங்கியில் கேளுங்க! எனக்கு ரூ.15 கோடி கடன் இருக்கு! திமுக எம்.எல்.ஏ.வின் சோகக் கதை!
திருச்சி: திருச்சி கனரா வங்கியில் வந்து கேட்டுப் பாருங்கள் எனக்கு பத்து, பதினைந்து கோடி ரூபாய் வரை கடன் இருக்கிறது என தனது சோகக் கதையை பகிர்ந்துள்ளார் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி.
வாங்கிய கடனையே கட்ட முடியாத சூழலில் தான் தாம் இருந்து வருவதாகவும் அப்படியிருக்கும் போது கல்குவாரியை வைத்து தாம் பெரியளவில் எதையும் சம்பாதித்துவிடவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

கல்குவாரியில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுத்திருந்தால் இந்நேரம் தாம் எவ்வளவோ வசதி வாய்ப்புடன் வாழ்ந்திருக்க முடியும் என்றும் ஆனால் அது போல் செய்யாததால் தான் இன்னும் தாம் கடனாளியாகவே இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது கல்குவாரிக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ள நிலையில் அவர் இதனை செய்தித் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு குறித்து இவர் பேசிய ஆடியோ ஒன்று சர்ச்சையாகி இருந்தது. அதாவது தனது கல்குவாரிக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் சொல்லி அபராதம் போடச் சொன்னதே அமைச்சர் நேரு தான் என இவர் அதில் தெரிவித்திருந்தார்.
பழனியாண்டி எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த அமைச்சர் நேரு சொந்தக் கட்சிக்காரர்களுக்கு தாம் எந்த துரோகமும் செய்ய மாட்டேன் என்றும் தாம் தான் அபராதம் விதிக்கச் சொன்னேன் என்பதை பழனியாண்டியை நிரூபிக்கச் சொல்லுங்கள் என விளக்கம் அளித்திருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தனது கல்குவாரியை மட்டும் மிகைப்படுத்தி சிலர் குற்றஞ்சாட்டுவதாகவும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து கல் குவாரியை அளந்துகொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவருக்கே இந்த நிலையா என்பது தான் திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.












Click it and Unblock the Notifications