பன்றிக்காய்ச்சலுக்கு பள்ளி சிறுவன் பலி... பீதியில் திருச்சி மக்கள்
திருச்சி: பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்குமலை கருமாரிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் அய்யம்பெருமாள். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் சஞ்சய் (வயது 8) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து சஞ்சயை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சஞ்சயை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவனுக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சஞ்சய், சிகிச்சை பலனின்றி காலை பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதி மற்றும் துவாக்குடி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருப்பதோடு, அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்த பயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிறுவனின் தந்தை அய்யம்பெருமாள் கூறுகையில், சஞ்சய்க்கு கடந்த 7-ந் தேதி முதல் காய்ச்சல் இருந்தது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காண்பித்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அங்கும் சஞ்சய்க்கு காய்ச்சல் குறையவில்லை. இதனால் சஞ்சயை கடந்த 18-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு முதலில் நிமோனியா காய்ச்சல் போல் உள்ளது என்று கூறினர். பின்னர் சஞ்சய்க்கு பன்றிக்காய்ச்சல் முற்றிவிட்டது என்று கூறி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினர். அங்கு சரியான சிகிச்சை அளிக்காததாலேயே சஞ்சய் இறந்து விட்டான் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications