டாஸ்மாக்கில் இன்று முதல் மாற்றம்.. ரூ.10 காலி மது பாட்டில்கள் திட்டத்துக்கு திருச்சியில் எதிர்ப்பு
திருச்சி: காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஊழியர்கள் பற்றாக்குறை, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாட்டில்களை சேமித்து வைக்க இடம், வாங்கப்படும் பாட்டில்களை கையாளுவதற்கான பயிற்சி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் மலைப்பகுதிகளிலேயே வாழ்கின்றவர்கள், மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே வீசி சென்று விடுகிறார்கள். இதனால் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது..

குறிப்பாக, கால்நடைகளின் கால்களில் இத்தகைய மது பாட்டில்கள் குத்தி காயங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. எனவேதான், நீதிமன்ற உத்தரவுப்பட மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது.
ரூ.10 கூடுதல் வசூல்
இந்த திட்டத்தின் மூலம் மதுபான கடைகளில் ரூ.10 அதிகமாக மது பானங்கள் விற்கப்பட்டன. காலி பாட்டிலை மறுபடியும் மதுக்கடைகளில் தந்து, 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.. அதாவது, MRP எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன், கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், மலைப்பகுதி மட்டுமல்லாமல் 9 மாவட்ட மதுபானக்கடைகளிலும், அடுத்து 7 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டது.. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்து, இதற்காக மாவட்டம் வாரியாக, டெண்டரும் கோரப்பட்டது.
காலி மது பாட்டில்கள் வைக்க தனி இடம்
ஆனால், சென்னை ஹைகோர்ட்டில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், "டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணிக்கு டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை நியமித்தால் பணிச்சுமை ஏற்படும்.
எனவே, டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள்
இப்படிப்பட்ட சூழலில், திருச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், மீண்டும் பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது..
அனைத்து சில்லரை மதுபானம் விற்பனை கடைகளில், காலி மது பாட்டில்களை திருப்பி கொடுத்தால், 10 ரூபாய் கொடுக்கும் திட்டம் சேலம் மாவட்டத்தில் நடைமுறைக்கு வருவதாக கலெக்டர் சரவணன் அறிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..
திருச்சி, டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகத்தை, டாஸ்மாக் பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.. இதில், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வேலைப்பளு அதிகம்
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பணியாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, வேலைப்பளு அதிகம் இருப்பதால், காலி பாட்டில்களை திரும்ப பெற முடியாது.- தனியார் நிறுவனத்திடம் ஆட்கள் பெற்று, அந்த பணியை செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications