"தமிழ்நாட்டு மக்களுக்கும் எனக்கும் உள்ள காதல்" சாதாரணமானது அல்ல.. அதையும் தாண்டி.. மநீம கமல்ஹாசன்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது இல்லை.. அதையும் தாண்டி புனிதமானது என்று பேசினார்.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது:-

இந்த ஆட்சி வரும் போது என்ன சொன்னாங்க.. சிலிண்டர் வாங்கும்போது பேங்கில் பணம் வரும் என்று சொன்னாங்க.. ஆனால் வந்ததா?.. சிலிண்டர் விலை என்ன?.. கணக்கு பாருங்க.. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போது லாபத்திற்கு விற்ற அரசு அங்கே அமர்ந்திருந்தது. அதை விமர்சிக்க வேண்டியது நம் கடமை. நியாபக படுத்துவதற்காக தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
வேற எதுவும் கேட்க வரவில்லை. தம்பிக்காக இங்கே வந்திருக்கிறேன் (துரை வைகோவுக்காக) எனக்காக இல்லை. இதில் என் கட்சிக்காரர்களுக்கு பெரிய வருத்தம் இருக்கிறது. நோ பெய்ன் நோ கெய்ன்.. வலியை தாங்கிக்கொள்ளுங்கள்.. நாளை நமதே.. என்று சொல்லியிருக்கிறேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என்பது தான் என்னுடைய கேள்வி?.. இந்த வடை பசியை ஆற்றாது ஏனென்றால்.. இந்த வடை வாயினால் சுட்ட வடை.. அது நோயாகத்தான் முடியும். அங்கே ஆஸ்பத்திரி இருக்காது. இதையெல்லாம் நியாபகப்படுத்தி சொல்ல இங்கே வந்திருக்கிறேன். அரசியலில் மதம் கலந்த எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
உங்களது மனங்களிலும் எனக்கு இடம் உண்டு. உங்களது வீடுகளிலும் எனக்கு இடம் உண்டு. தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும், எனக்கும் உள்ள காதல் சாதாரணமானது இல்லை.. .. இது சாதாரண காதல் அல்ல.. அதையும் தாண்டி.. ரொம்ப புனிதமானது.. எனக்கு மனிதன் தான் மதம். துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இது எனக்காக நான் கேட்கவில்லை. நமக்காக நான் கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications