பண்ணை குட்டை மூலம் மாதம் 300 கிலோ மீன்... மனநிறைவான வருமானம்
திருச்சி: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பண்ணைக்குட்டைகள் மூலம் மீன்வளர்ப்பில் ஈடுபட்டு அசத்தி வருகிறார் கமலக்கண்னன் என்ற விவசாயி.
திருவாரூரிலிருந்து குடவாசல் செல்லும் சாலையில் உள்ள கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் கமலக்கண்னன். பி.காம் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் 2 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.
விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவருக்கு குடும்பத்தினரை பிரிந்து மீண்டும் வெளிநாடு செல்வதற்கு விருப்பமில்லை.

மீன்வளர்ப்பு
இதையடுத்து தனது நிலத்தில் விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்த கமலக்கண்ணன் அது தொடர்பான தேடுதல்களில் ஈடுபட்டுள்ளார். அப்போது மீன்வளர்ப்பு மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும் என நீடாமங்கலம் கே.வி.கே.அதிகாரிகள் எடுத்துக்கூறியுள்ளனர். இதனால் அவரும் மீன் வளர்ப்பு தொடர்பாக தேடி தேடி படித்து, அது தொடர்பாக மீன்வளப் பல்கலைக்கழக பேராசியர்களையும் சந்தித்துள்ளார்.

தோட்டத்தில் விற்பனை
அவர்கள் கொடுத்த அறிவுரையினாலும், ஊக்கத்தினாலும், தனது நிலத்தில் அரசு மானியத்தில் மீன் வளர்ப்பு குட்டைகளை அமைத்தார். அதில், கட்லா, ரோகு, மிர்கால், புல்லுக்கெண்டை, சில்வர் கெண்டை உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த மீன்களை வளர்த்து வருகிறார். வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை பிடித்து தனது தோட்டத்தில் வைத்தே விற்பனை செய்கிறார் கமலக்கண்ணன்.

ரூ.50,000 வருமானம்
இது தொடர்பாக நாம் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, கட்லா, ரோகு போன்ற மீன்களை கிலோ 180 ரூபாய்க்கு நேரடியாக விற்பனை செய்வதாகவும், உயிருடன் பிரெஷ்ஷாக மீன்கள் கிடைப்பதால் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வந்து மக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்வதாக தெரிவித்தார். மேலும், இதன் மூலம் செலவு போக மாதம் 50,000 வரை சம்பாதிக்க முடிவதாக கூறுகிறார்.

மீன்வளர்ப்பு பயிற்சி
கமலக்கண்ணனிடம் மீன் வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக வாரத்திற்கு 50-ல் இருந்து 100-பேர் வரையாவது அவருடைய மீன் பண்ணைக்கு வந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். மீன்வளர்ப்பு மட்டுமல்லாமல் மீன் குஞ்சும் உற்பத்தி செய்து ஒரு மீன் குஞ்சு ஒரு ரூபாய்க்கு விற்கிறார். அதனை ஏராளமானோர் வாங்கிச்சென்று வளர்க்கின்றனர்.

வெற்றி
இது குறித்து நம்மிடம் பேசிய கமலக்கண்ணன், வெளிநாடு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊரில் அதுவும் மீன் வளர்ப்பில் ஈடுபட ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாகவும், இருப்பினும் தனது முழு ஈடுபாடும், ஆர்வமும் இந்த தொழிலில் வெற்றியை தேடித்தந்ததாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications