திருச்சி டிராபிக்கில் சிக்கிய ப.சிதம்பரம் கார்! அன்று ஜெயலலிதாவால் ரஜினி நிறுத்தப்பட்டாரே!
திருச்சி: திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார பொதுக் கூட்டத்தால் விமான நிலையம் மற்றும் அதை சுற்றிய இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அந்த நெரிசலில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் காரும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விஜய் திருச்சி மாவட்டத்தில் இருந்து தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதற்காக அவர் காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் பிரச்சார வாகனத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது தடுப்புகளை உடைத்துக் கொண்டு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வாகனத்தின் 4 புறங்களிலும் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து விஜய் வாகனம் வெளியே வருவதற்கே 1 மணி நேரத்திற்கும் மேலானது.
பிரச்சார வாகனம்
இதையடுத்து சாலையின் இருபுறமும் தொண்டர்கள் கூடியிருக்க, விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.மேலும் விஜய் திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் பகுதியில் 10.30 மணிக்கு பிரச்சாரம் தொடங்குவதாக சொல்லப்பட்டது. ஆனால் தொடர்ந்து மக்கள் கூட்டத்தில் இருந்து அவர் பிரச்சார இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தவித்தார்.
4 கி.மீ.ரை கடக்க திணறல்
4 கி.மீ. தூரத்தை கடக்க விஜய்க்கு 5 மணி நேரமானது. இதில் இடையே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் மாட்டிக் கொண்டது. பின்னர் போலீஸார் அங்கு வந்து அந்த போக்குவரத்தை சரி செய்தனர். இந்த நிலையில் திருச்சி விமான நிலையம், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்ல பொதுமக்கள் அவதியடைந்தனர். அதிலும் திருச்சி விமான நிலையத்தை சுற்றி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ப. சிதம்பரம் கார்
அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காரும் சிக்கிக் கொண்டது. சில நிமிடங்கள் அவர் காத்திருந்த நிலையில் விஷயத்தை அறிந்த போலீஸார் அந்த இடத்திற்கு வந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்து அவரது வாகனத்தை போக்குவரத்தில் இருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
98 நாட்கள் என்ன செய்வதோ
இந்த பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளே இப்படி மக்கள் அல்லோகலப்படுகிறார்கள் என்றால், இன்னும் டிசம்பர் 20 ஆம் தேதி வரை 98 நாட்கள் பிரச்சாரம் நடைபெறுகிறதே மக்கள் என்ன பாடுபட போகிறார்களோ என சமூக ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள்.
ரஜினி கார்
இதே போல் 1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கதீரடல் ரோடிலிருந்து போயஸ் தோட்டத்திற்குள் ரஜினிகாந்த் கார் செல்ல முயற்சிக்கிறது. அப்போது அந்த காரை தடுத்து நிறுத்திய போலீஸார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியே வருகிறார் என்பதால் அவர் போனதும் போகுமாறு தெரிவித்தனர்.
அரை கி.மீ. நடந்தே சென்ற ரஜினி
இதனால் ரஜினியும் 20 நிமிடங்கள் காரில் காத்திருந்தார். ஜெயலலிதாவின் கான்வாய் வாகனம் யாரும் வைத்திருக்காத அளவுக்கு பெரியதாக இருந்தது. அந்த கான்வாய் கடக்க அதிக நேரம் ஆனது. ரஜினி வைத்திருந்த அம்பாசிடர் கார் குறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெரியும். அதிலும் அதை ரஜினி ஓட்டுகிறாரா, டிரைவர் ஓட்டுகிறாரா என்பதை காரின் வேகத்தை வைத்தே தெரிந்து கொள்வார்கள்.
காத்திருந்த ரஜினி
இது வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். அப்படி ஒரு முறை ரஜினி வந்த போது 40 நிமிடங்கள் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் ரஜினி காத்திருந்து காத்திருந்து கோபமடைந்த நிலையில் காரை விட்டு இறங்கி நடந்தே சென்றார்.
கோபத்தின் வெளிப்பாடு
அதுவரை போக்குவரத்தை கட்டுக்கோப்பாக வைத்திருந்த போலீஸாரால் 30 நிமிடங்களுக்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்த மக்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது என கோபமடைந்து அவர்களும் கிளம்பினார்கள். இதனால் முதல்வர் ஜெயலலிதாவின் வாகனம் சிக்கியது. ரஜினி அப்போது அரை கி.மீ. தூரம் நடந்து சென்றார். வாடிக்கையாக போயஸ் கார்டனுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ரஜினியின் கோபத்தின் வெளிப்பாடு என அப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications