திருச்சியில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் விரட்டியடிப்பு! அதிமுக கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்திற்கு நடுவே வந்துள்ளது. ஆம்புலன்ஸில் சோதித்து பார்த்ததில் நோயாளி யாரும் இல்லாததால் அதனை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்கவே இந்த ஆம்புலன்ஸ் சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டத்திற்கு புகுந்த ஆம்புலன்ஸ்
அந்த வகையில் நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லார் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். மாலை 4 மணியளவில் மண்ணச்சநல்லார் பகுதியில் உள்ள கடைவீதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். இதற்கான ஏற்பாடுகள் முழுவதும் செய்யப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பாகவே அங்கு தொண்டர்கள் கூடி இருந்தனர். அப்போது அதிமுக கூட்டத்திற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸை நிறுத்தி உள்ளே சென்று அதிமுக தொண்டர்கள் பார்த்ததாக தெரிகிறது. இதில் உள்ளே நோயாளி யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல முடியாது என வழியை மறித்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தில் சிக்கியவரை மீட்க
இதற்கிடையே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸானது விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்பதற்காக சென்றதாகவும், அப்போதுதான் அதிமுகவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்து வருகிறார்கள். இப்படியொரு கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு
நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் செல்கிறது.. ஆம்புலன்ஸில் நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை ஒன்று இரண்டு அல்ல.. 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இனி ஆம்புலன்ஸ் இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுப்போம்.. ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு.. ஆம்புலன்ஸ் டிரைவர் யாருன்னு நோட் பண்ணுங்க என்று தொண்டர்களை நோக்கி பேசினார்.
மா சுப்பிரமணியன் பதில்
எடப்பாடியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இதற்கு விளக்கம் அளித்திருந்தார். அவர் கூறுகையில், மருத்துவர்களுக்கு விடுக்கின்ற மிரட்டல் தொனியில் அவர் பேசுகிறார்.. நான் வருகின்ற வழியில் ஆம்புலன்ஸை வேண்டும் என்றே விடுகிறார்கள் என்று சொல்கிறார்..அது தவறான விஷயம்.. நானும் கூட பார்த்தேன்.. ஆம்புலன்ஸ் நம்பரை நோட் பண்ணு.. ஆம்புலன்ஸ் டிரைவர் யாருன்னு நோட் பண்ணு.. என்று சொல்கிறார்.. தமிகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் இப்படி மிரட்டல் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல்..
அவர் இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.. இது மக்களிடையே கூடுதல் எதிர்ப்பை தான் தேடித்தரும்.. இது மாதிரியான பேச்சு அவரது மதிப்பை கெடுக்கும் வகையில் தான் அமையும்.. என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications