கொரோனா கோரத்தாண்டவம் - திருச்சியில் ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு - தீவிர பொதுமுடக்கம் அமலாகுமா
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது போல திருச்சியிலும் பொது முடக்கம் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிர பொதுமுடக்கம் அமலில் இருந்த போது கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பற்றிப்பரவி வருகிறது.
மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்துக்கும், விமான போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர். இதனால் அண்டை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொருநாளும் உச்சம்- 24 மணிநேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா- 418 பேர் மரணம்
கொரோனா பாதிப்பு அதிகம்
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 356 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட பரிசோதனையில் 78 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 434 ஆக உயா்ந்துள்ளது.
சென்னையில் இருந்து வந்தவர்கள்
திருச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 78 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என சுகாதாரத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து வந்தவர்களை இ-பாஸ் பட்டியலை வைத்துக்கொண்டு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
வீடு திரும்பியவர்கள்
திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் உள்பட 25 போ் குணமடைந்து புதன்கிழமை மாலை அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 206 ஆக உயா்ந்துள்ளது.
உறவினர்கள் வாக்குவாதம்
கொரோனா தொற்றால் திருச்சியில் மேலும் ஒருவா் உயிரிழந்தார். இதனால், அவரின் உறவினா்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருச்சி இ.பி.சாலை பாபு தோப்புப் பகுதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடா்ந்து, அவரின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 பேரும் திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். இந்நிலையில், தீவிர சுவாசத் தடை காரணமாக அந்த குடும்பத்தைச் சோ்ந்த முதியவா் நேற்று உயிரிழந்தார்.
9 பேர் உயிரிழப்பு
முதியவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் கூறி மருத்துவா்கள், செவிலியா்களுடன் ரகளையில் ஈடுபட்டனா். அதோடு, வார்டில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடத்தி உறவினா்களை சமாதான படுத்தியதால், புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திருச்சியில் கொரோனாவால் 8 போ் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 9 ஆக உயா்ந்துள்ளது.
தீவிர விசாரணை
இதனிடையே கொரோனா வைரஸ் திருச்சியில் தீவிரமாக பரவ காரணம் என்ன என்பது பற்றி சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பது இல்லை என்பதால் இ பாஸ் மூலம் திருச்சிக்கு வந்தவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருச்சி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைப் போல திருச்சியிலும் தீவிர பொது முடக்கம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.