ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை அறியும் கண்டறியும் சோதனையை 2 மாதத்துக்குள் நடத்த நீதிபதி அனுமதி!
திருச்சி: திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனையை 2 மாதங்களுக்குள் நடத்த திருச்சி நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி, திருச்சியில் நடை பயிற்சி சென்ற போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை அமைப்புகள்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. முன்னதாக சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ்நாடு போலீசாரே மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரும் வழக்கும் நடைபெற்று வருகிறது.

13 ரவுடிகள் தொடர்பு
இக்கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிகள் 20பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 13பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. 13 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் நீதிமன்றத்தில் எஸ்.பி.ஜெயக்குமார், வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனு தாக்கல் செய்தார்.

உண்மை கண்டறியும் சோதனை
இவ்வழக்கில் தென்போவன் என்கிற சண்முகம் என்ற ரவுடியை தவிர எஞ்சிய 12 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். இதனால் 12 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவ சோதனை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2 மாதத்துக்குள் சோதனை
திருச்சி ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு டிஎஸ்பி மதன்குமார் மற்றும் ரவுடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து கலைவாணன், தினேஷ், லெப்ட செந்தில், சிவா (எ) குணசேகரன், ராஜ்குமார்,தீலிப், லட்சுமி நாராயணன். ஆஜராகினர். இன்று சீர்காழி சத்யராஜ், சுரேந்தர் ஆகிய ரவுடிகளின் வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராவில்லை. பின்னர் மாலை 5.30 அளவில் நீதிபதி சிவகுமார் 12 ரவுடிகளுக்கும் இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications