20 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு... அதிரடி காட்டும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஐ.பி.எஸ்.
திருச்சி: திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஐ.பி.எஸ். 20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக காலையிலேயே சைக்கிளில் வலம் வந்தார் ஆனி விஜயா ஐ.பி.எஸ்.
ஆய்வின் போது பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என காவலர்களுக்கு அவர் அறிவுரை நல்கினார்.

காவலர்களுக்கு பயிற்சி
திருச்சி சரஜ டி.ஐ.ஜி.யாக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பதவியேற்றுக் கொண்ட ஆனி விஜயா ஐ.பி.எஸ். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பதவியேற்ற அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புகார் கூற வரும் பொதுமக்களை காவல்துறையினர் மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் பொதுமக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் கூறினார்.

சைக்கிளில் ஆய்வு
மேலும் திருச்சி சரகத்தில் ப்ரண்ட் ஆஃப் போலீஸ் குழுவை காவல்துறையினர் பயன்படுத்த தடை விதித்தார். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், அதற்கான கண்காணிப்பு பணிகளை சைக்கிள் சென்று ஆனி விஜயா ஐ.பி.எஸ். ஆய்வு நடத்தினார். திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து திருச்சி-புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாத்தூர் வரை சைக்கிளில் சென்றார். எஸ்கார்ட், பாதுகாவலர்கள் என பெரிய படையை உடன் அழைத்துச்செல்லாமல் அவர் இந்த ஆய்வை நடத்தினார்.

கண்ணியம்
ஊரடங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்றும், உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் சுற்றிதிரிபவர்கள், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோல் வார்த்தை பிரயோகங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என காவலர்களுக்கு எடுத்துக்கூறினார். மேலும், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார்கள், குறைகளை கேட்டறிந்தார்.

காணொலி மூலம்
இதனிடையே இதற்கு முன்னர் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். வாரத்தில் இரண்டு நாட்கள் காணொலி மூலம் பொதுமக்கள் சந்திப்பை நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். அப்போது அவர்கள் அளித்த புகார்களை அடிப்படையாக வைத்து 80 காவலர்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார். அந்த வகையில் திருச்சி சரக புதிய டி.ஐ.ஜி.யான ஆனி விஜயாவும் கானொலி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு பணிகளை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications