மரங்கள், மின் கம்பங்களை முறித்து போட்ட கஜா.. திருச்சியில் பெரும் சேதம்.. களத்தில் இறங்கிய கலெக்டர்
திருச்சியில் புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
Recommended Video

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மரங்கள், மின்கம்பங்கள் என அத்தனையையும் ஒன்றுவிடாமல் அடியோடு சாய்த்து சென்றுவிட்டது கஜா புயல்!
திருச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் காரணமாக அதிவேக காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று இரவெல்லாம் பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது.
நள்ளிரவு தொடங்கி இடைவிடாது மழை கொட்டி கொண்டே இருந்தது. மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

சாய்ந்து கிடக்கும் மரங்கள்
அதனால், திருச்சி காஜாமலையில் இருந்து கேகே நகர், செல்லும் பகுதியில் மரங்கள் வேருடன் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாதியில் நிறுத்தம்
அதேபோல, திருச்சி கரூர் ரயில் வழித்தடத்தில் மின்சாரம் தடைபட்டது. அதனால் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் மற்றும் கரூர் திருச்சி இடையேயான பயணிகள் ரயில் ஆகியவை நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. லால்குடி, புள்ளம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

போக்குவரத்து துண்டிப்பு
அத்துடன் காட்டூர் சிறுமயங்குடியில் மின்கம்பம் காற்றின் வேகத்தில் சாலையில் குறுக்கே விழுந்து. இதனால் இச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மணப்பாறை பகுதியில் அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்காமல் திருப்பி அனுப்பப்பட்ட இண்டிகோ விமானம் சென்னைக்கு திரும்பி விடப்பட்டது.

களத்தில் இறங்கினார்
திருச்சி மாவட்டமே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால கலெக்டர் ராசாமணி களத்தில் விரைந்து இறங்கி உள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திருச்சி கே.கே.நகர், காஜாமலை, விமான நிலையம், உறையூர், மற்றும் மாநகர பகுதிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கலெக்டர் ராசாமணி
பின்னர் சமயபுரம், மண்ணச்சநல்லூர், தாத்தையங்கார்பேட்டை, முசிறி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு சேதமடைந்த மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்கள். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை அந்தந்த தாலூகா வட்டாசியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவிகளை செய்யுமாறும் கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications