திடீர் திருப்பமாக போட்டியில் இருந்து விலகல்! திருச்சி திமுக மாஜி எம்.எல்.ஏ. எடுத்த முடிவின் பின்னணி!
திருச்சி: திருச்சி மாநகராட்சி 40-வது வார்டு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்கிறார்.
இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரனுக்கு பதில் அவரது மகன் 40-வது வார்டு திமுக வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு திமுகவில் ஏற்கனவே பலர் போட்டியில் உள்ள சூழலில், நாகரீகம் கருதி கே.என்.சேகரன் போட்டியிலிருந்து விலக முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். தேமுதிகவை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டன. அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் 40-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் திடீர் திருப்பமாக போட்டியிலிருந்து விலகியிருக்கிறார்.

பலர் போட்டி
தனக்கு பதில் தமது மகனை 40-வது வார்டில் நிறுத்தியிருக்கிறார். இதற்கு மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளே காரணமாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் கே.என்.நேருவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் அன்பழகன் போட்டியிடுகிறார். அதேபோல் காஜாமலை விஜய், விஜயா செல்வராஜ், மலைக்கோட்டை மதிவாணன், உள்ளிட்டோரும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவருமே மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான ரேஸில் இருப்பவர்கள்.

மேயர் ரேஸ்
மேற்கண்ட இந்த 4 பேரில் திருச்சி மேயர் பதவிக்கான ரேஸில் அன்பழகன் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக மலைக்கோட்டை மதிவாணன் இருக்கிறார். இவர்களில் இருவரில் ஒருவர் மேயராகவும் மற்றொருவர் துணை மேயராகவும் வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தானும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று, வெறுமனே மாமன்ற உறுப்பினராக இருப்பதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் விரும்பவில்லையாம்.

வாரியத் தலைவர்
இதனால் நாகரீகமாக இப்போதே போட்டியில் இருந்து விலகிக் கொள்வது என அவர் முடிவெடுத்திருக்கிறார். இதனிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்காக தனது திருவெறும்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்தவர் சேகரன் என்பதால், விரைவில் இவர் ஏதேனும் ஒரு வாரியத்திற்கு தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications