தவறான சிகிச்சை.. களத்தில் குதித்த நர்சிங் மாணவிகள்! சமாதான பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தைக் கண்டித்து செவிலியர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கின. தற்போது சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக, செவிலியர் மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் உத்தரவை வெளியிட்டது. ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இக்குழுவிற்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் என். பாஸ்கர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர்கள் எம். பாரதி மோகன், பி. சண்முகசுந்தரம் (மயக்கவியல்), என். ஜெயபிரகாஷ் (மருத்துவம்) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நர்சிங் மாணவியின் உயிரிழப்பு மற்றும் விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து செவிலியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் என 10 பேரை காவல்துறை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றது.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. தற்போது, உயர்மட்டக் குழு மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications