பெண் போலீஸ் இடது கையை முறுக்கியதாக சவுக்கு சங்கர் வாக்குமூலம்! மருத்துவ பரிசோதனைக்கு கோர்ட் உத்தரவு
திருச்சி: யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டாரா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸார் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அவதூறாக பேட்டியளித்ததாக சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவரை தேனியில் வைத்து கைது செய்தனர்.

இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவானதை அடுத்து சென்னை பெருநகர காவல் துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
இதனிடையே சவுக்கு சங்கரை கைது செய்த போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியதால் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு கையில் கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீஸார் கோவை 4ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீது விசாரணை நடத்திய நிலையில் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். பெண் போலீஸாரை அவதூறாக பேசியதற்கு ஆதாரம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து விசாரணை முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த நிலையில் பெலிக்ஸின் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர், முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் முத்து என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதன் பேரில் கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் போலீஸார் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். சவுக்கு மீது ஏற்கெனவே 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு இன்று காலை 7.30 மணிக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.
அவரை சுற்றி 100 பெண் போலீஸாரும் 20 ஆயுதபடை பெண் போலீஸாரும் காவலுக்கு வந்தனர். சவுக்கு சங்கர் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கர், "என்னை பெண் போலீஸார் கடுமையாக தாக்கினர். எனக்கு காலை உணவாக பொங்கல் வாங்கிக் கொடுத்தனர்.
பிறகு என் மூக்குக் கண்ணாடியை கழற்றிவைத்துவிட்டு என்னை தாக்கினர். எனது இடது கையை முறுக்கினர். மேலும் மன்னிப்பு கேட்க வைத்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வேறு யாருக்கோ வாட்ஸ் ஆப்பில் அனுப்பினர். எனவே இதை நீதிபதி பதிவு செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து சவுக்கு சங்கரின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி, அவருக்கு வேறு ஏதேனும் காயம் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். சவுக்கு சங்கர் தாக்கியதாக கூறிய போது பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்த போது வழக்கறிஞர்கள் சிலர் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications