திருச்சியில் பரபரப்பு.. மனைவி கண் முன்னே அடித்து கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சி: சுடுகாட்டின் ஆக்கிரமிப்பை அகற்றியது தொடர்பான பிரச்சினையில் மனைவி கண் முன்னே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள செங்கற்சோலை கிராமத்தைச் சேர்ந்த, சிவக்குமார்(50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவக்குமாருக்கு யோகேஷ் என்ற மகனும், அபிநயா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மாலை திடீரென ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் தீபக் என்ற நபர்கள் சிவக்குமாரை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

கட்டையால் தாக்குதல்
இதனால் ஏற்பட்ட வாய் தகராறு அப்படியே கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த தீபக் மற்றும் பிரபாகரன் இருவரும் அங்கிருந்த கட்டையை எடுத்து சரமாரியாக சிவக்குமாரை தாக்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இருவரையும் தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவரையும் அடித்துத் தள்ளி விட்டுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சிவக்குமார்
இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த சிவகுமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

மனைவி புகார்
இதுகுறித்து சிவகுமார் மனைவி மைதிலி திருச்சி சோமரசன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சிவக்குமாரின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சுடுகாடு ஆக்கிரமிப்பு
சிவக்குமார் மனைவி மைதிலி அளித்த புகாரில், அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டின் ஆக்கிரமிப்பை அகற்றியது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், வாசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ரவிமுருகையா, நாகராஜ் மகன் பிரபாகரன் என்ற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோருக்கும் தனது கணவர் சிவகுமாருக்கும் தகராறு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர்கள் தான் தனது கணவரை அடித்துக் கொன்றதாகக் கூறி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications